Mammootty x page
சினிமா

"நீண்டகாலமாக வாசனை அறியும் திறன் இல்லாமல்.." - தன் உடல்நலம் குறித்து மம்மூட்டி | Mammootty

சில விஷயங்கள் இல்லாமல் இருக்கும்போதுதான் அதன் மதிப்பு தெரியும். கண் பார்வையும் கேட்கும் திறனும்தான் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானவை. சுவாசமும்கூட, சிலருக்கு சுவாசிக்க முடிந்தாலும் வாசனை உணர முடியாமல்கூட இருக்கும்.

Johnson

நடிகர் மம்மூட்டி சில மாதங்களாக உடல்நலத்துக்கான சிகிச்சைகள் எடுத்து, சமீபத்தில்தான் மீண்டுவந்து படப்பிடிப்புகளுக்கு திரும்பியுள்ளார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்வில் தன் உடல்நிலை பற்றி பகிர்ந்துள்ளார்.  Care and Share International Foundation அமைப்பின் 16வது ஆண்டுவிழா மற்றும் ’காதோடு காதோரம்’ என்ற செவித்திறன் கருவி வழங்கும் முன்னெடுப்பின் நிகழ்வில் கலந்துகொண்டார் மம்மூட்டி. அந்த நிகழ்வில் பேசிய அவர், " ‘காதோடு காதோரம்’ என்ற இந்த முயற்சி, மகிழ்ச்சி அளிக்கும் ஒன்று. இசை உட்பட நாம் கேட்கும் அனைத்தையும், செவித் திறன் சவால் கொண்டவர்களுக்கு கேட்க செய்வது நல்ல விஷயம். எனக்கு அப்படியான சில நபர்களை தெரியும். படப்பிடிப்பு சமயத்தில் செவித் திறன் சவால் கொண்ட ஒருவருக்கு, நான் கேட்கவைக்கும் கருவி வாங்கிக் கொடுத்தேன். அதை மாட்டியவர் உடனே கழற்றிவிட்டார். சப்தங்கள் என்ற விஷயத்தோடு அவருக்கு எந்த அனுபவமும் இல்லை. அதன் தேவையும் அவருக்கு ஏற்படவில்லை. எனவே, அதன்பின் அந்தக் கருவியை அவர் பயன்படுத்தவே இல்லை. இதுபோல பலர் இருக்கலாம்.

Mammootty

ஆனால், நமக்குச் சில விஷயங்கள் இல்லாமல் இருக்கும் போதுதான் அதன் மதிப்பு தெரியும். கண் பார்வையும் கேட்கும் திறனும்தான் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானவை. சுவாசமும்கூட, சிலருக்கு சுவாசிக்க முடிந்தாலும் வாசனை உணர முடியாமல்கூட இருக்கும். எனக்கு நீண்டகாலமாக வாசனை அறியும் திறன் இல்லாமல் இருந்தது. எதனையும் என்னால் நுகர முடியவில்லை. இப்போதுதான் அது மெதுவாகத் திரும்பி வருகிறது. ஒரு விஷயத்தை நாம் இழக்கும்போதுதான் அதன் மதிப்பை உணர்கிறோம்" என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், “நாம் யாரையாவது மென்மையான குரலில் பேசச் சொன்னால் அது நம்மால் கேட்க முடியும் என்பதால்தான். சத்தத்தைக் குறைக்கச் சொல்வதற்கே நமக்குக் காது கேட்க வேண்டும். கேட்கும் திறன் இல்லாதவர்களுக்கு அந்த வாய்ப்பே இல்லை. ஒரு பாடலைப் பிடித்துள்ளது அல்லது பிடிக்கவில்லை என்ற விருப்பங்கள் எல்லாம் நம்மால் கேட்க முடிவதால்தான். சிலருக்கு வயது கூடக்கூட கேட்கும் திறனும் குறையும். எனவே கேட்கும் திறன் ஒரு ஆசி. பிறவியில் இருந்து அது இல்லாதவர்களுக்கு, அப்படியான வாய்ப்பை உருவாக்கி கொடுப்பது சிறப்பானது.

மம்மூட்டி

மனிதன் என்பது பூரணமானவர் ஆவது, நல்லதை சிந்திப்பது மற்றும் செய்வதன் மூலமாகவும், தீமையை எதிர்ப்பதன் மூலமாகவும்தான். சின்னசின்ன விஷயங்களுக்கும் நாம் கோபிக்கிறோம், பகைமை, வெறுப்பு வருகிறது. நம் ஆயுள் காலம் என்ன என்பதை யோசித்தாலே இது எதனையும் நாம் செய்ய மாட்டோம். உலக அழிவுவரை நாம் வாழ்வோம் என்பது பொய் என்றாலும், அப்படி நம்புவதால்தான் மனிதர்கள் தவறாக நடந்து கொள்கிறார்கள். கடவுள் நம்பிக்கையில்கூட நல்லது செய்தால்தான் சொர்க்கத்தில் இடம் என இருக்கிறது. அதை நம்பியாவது நல்லது செய்வோம். கடவுள் நம்பிக்கை இருக்கோ, இல்லையோ நல்லது செய்வதற்கான மனதும், வாய்ப்பும் உங்களுக்கு அமைய வேண்டும் என விரும்புகிறேன்" என்றார்.