சினிமா

"வன்முறை இன்னொரு வன்முறையை மட்டுமே கொடுக்கும்"- வெளியானது ‘ஜோ 50’ உடன்பிறப்பே பட ட்ரைலர்

நிவேதா ஜெகராஜா

சசிகுமார் - ஜோதிகா கூட்டணியில் உருவாகியுள்ள உடன்பிறப்பே திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. படத்தின் தயாரிப்பாளர்களான சூர்யா - ஜோதிகா இதை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிப்பில், ‘கத்துக்குட்டி’ திரைப்பட இயக்குநர் சரவணன் இயக்கியுள்ள திரைப்படம், உடன்பிறப்பே. இதில் சசிகுமாரும் ஜோதிகாவும் அண்ணன் தங்கையாக நடித்துள்ளனர். ஆயுத பூஜையை முன்னிட்டு வரும் 14 ஆம் தேதி இந்தத் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியிடப்படுகிறது. வெளியீட்டு தேதி பற்றி அறிவிப்புகள் முன்னரே வெளிவந்த நிலையில், தற்போது இதன் ட்ரைலர் வெளிவந்துள்ளது.

இத்திரைப்படம், ஜோதிகாவின் 50-வது திரைப்படமாக வெளிவரவுள்ளது. படத்தில் சமுத்திரக்கனி, சில்லுக்கருப்பட்டி புகழ் நிவேதிதா, நடிகர்கள் சூரி, கலையரசன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். “வன்முறை எப்போதுமே தீர்வாகாது. வன்முறை இன்னொரு வன்முறையை மட்டுமே கொடுக்கும்” என்ற கருத்தை படம் முன்மொழிகிறது.

ட்ரைலரை பகிர்ந்திருக்கும் சூர்யா, “இவர்கள் உங்களை ஒரே நேரத்தில் சிரிக்கவும், அழவும், மகிழவும் வைப்பார்கள். பிரிக்க முடியாத ஒரு உடன்பிறப்புகளின் கதை இது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.