Vijay - Jason Sanjay Sigma
சினிமா

அம்மாவிடம் கண்டிப்பா கேட்கணும்.. அப்பா தான் இதுக்கு காரணம்! சங்கீதா-விஜய் குறித்து ஜேசன் நெகிழ்ச்சி!

தன்னுடைய அப்பா விஜய் மற்றும் அம்மா சங்கீதா குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் ஜேசன் சஞ்சய்..

PT WEB

சிக்மா படத்தின் ரிலீஸை முன்னிட்டு தெலுங்கு ஊடக பேட்டியில் ஜேசன் சஞ்சய், பெற்றோரின் ஆதரவை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் உடனான திருமண உறவில் இருந்து விவகாரத்து வேண்டும் என்று தொடர்ந்த வழக்கை, அவரது மனைவி சங்கீதா சமீபத்தில் வாபஸ் பெற்றிருந்தார். இது, தவெகவினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இப்படியான சூழலில், தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்த விஜய்-சங்கீதா ஆகியோரின் மகன் ஜேசன் சஞ்சய், தனது பெற்றோர்கள் குறித்து, உருக்கமாக பேசியுள்ளார். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

சந்தீப் கிஷன் நடிப்பில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சிக்மா. முதலமைச்சர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள இந்த திரைப்படம், வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் மீது, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ரிலீஸ்-க்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், படத்தின் புரமோஷன் பணிகளில், ஜேசன் சஞ்சய் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு, படத்தின் ஹீரோ சந்தீப் கிஷனுடன் இணைந்து, ஜேசன் சஞ்சய் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், தனது அப்பா விஜய் மற்றும் அம்மா சங்கீதா ஆகியோர் குறித்து அவர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அதாவது, இயக்குநராக வேண்டும் என முடிவெடுத்த பிறகு, உங்கள் தந்தையிடம் இதுகுறித்து கூறியிருப்பீர்கள். அப்போது அவரது ரியாக்ஷன் என்னவாக இருந்தது என்று கேள்வி கேட்கப்பட்டது.

விஜய், சங்கீதா

அதற்கு பதில் அளித்த அவர், நான் வெளிநாடு சென்று திரைப்படங்கள் இயக்கம் குறித்த Course-ஐ படிக்க விரும்புவதாக, என் அப்பாவிடம் சொன்னபோது, அவர் கொஞ்சம் கூட தயங்கவே இல்லை. சினிமா துறையில் நீண்ட காலமாக பயணிப்பதால், அவர் தான் எனக்கு முதலில் பச்சைக் கொடி காட்டினார். என் அம்மா மற்றும் சகோதரியை காட்டிலும், அவர்தான் நான் கூறியதன் முக்கியத்துவத்தை உண்மையாகப் புரிந்துக் கொண்டார் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தனது அம்மா சங்கீதா குறித்து பேசிய ஜேசன் சஞ்சய், ஒரு குழந்தையை போல் தான் என்னை நடத்துவார். நான் இயக்குநராக மாறிய பிறகு, அவரிடம் நேரம் செலவழிக்க முடியவில்லை. இருப்பினும், எல்லா சமயங்களிலும் என்னை ஊக்குவித்துக் கொண்டே இருப்பார் என்று தெரிவித்தார். மேலும், படத்தை பார்த்துவிட்டு தனது தாய் சங்கீதா எந்த மாதிரியான கருத்தை கூறுவார் என்று அறிவதில், மிகுந்த ஆவலாக உள்ளேன் என்றும், தனது கருத்துக்களை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் தெரிவிப்பவர் தான் தனது தாய் என்றும், அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.