சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவால், விஜயின் 'ஜனநாயகன்' திரைப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு, ஜனவரி 21க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம் `ஜனநாயகன்'. விஜயின் கடைசிப் படமான இது ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. படம் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி சென்சாருக்கு அனுப்பப்பட்டது. அதற்கு U/A சான்றிதழை பரிந்துரைத்தும், தணிக்கைச் சான்று தரப்படவில்லை எனவும் பிரச்னை எழுந்தது. இது சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது தயாரிப்பு நிறுவனம். நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், விஜயின் `ஜனநாயகன்' படத்துக்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது, மேலும் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பிய உத்தரவையும் ரத்து செய்தது.
இதைத் தொடர்ந்து, ஜனநாயகனுக்கு தணிக்கைச் சான்று வழங்கும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ”தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக அவசரமாக மேல்முறையீடு செய்தது ஏன்” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, “பதில் மனு தாக்கல் செய்ய போதிய கால அவகாசம் அளிக்கப்படவில்லை” என தணிக்கை வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ”டிசம்பர் 22ஆம் தேதியே தணிக்கை முடிவு தெரிவிக்கப்பட்டும், வழக்கு தொடர தாமதம் ஏன்” என தயாரிப்பு நிறுவனத்துக்கு தணிக்கை வாரியம் கேள்வி எழுப்பியது.
இதையடுத்து, ”தணிக்கைச் சான்றிதழ் வரும் முன்பே படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது ஏன்” என வினவிய தலைமை நீதிபதி, ”ஜனநாயகன் வெளியீட்டுத் தேதியை அறிவித்துவிட்டு நீதிமன்றத்துக்கு அழுத்தம் தராதீர்கள்” என்றும் தெரிவித்தார். இதையடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ஜனநாயகன் படம் தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதித்தனர். மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டு மனுவுக்குபதிலளிக்குமாறு தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.