ஜனநாயகனுக்கு U/A வழங்க தீர்ப்பு... தடைமேல் தடைபோட்ட தணிக்கை வாரியம்! | Jana Nayagan
விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம் `ஜனநாயகன்'. விஜயின் கடைசிப் படமான இது ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. படம் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி சென்சாருக்கு அனுப்பப்பட்டது. அதற்கு U/A சான்றிதழை பரிந்துரைத்தும், தணிக்கைச் சான்று தரப்படவில்லை எனவும் பிரச்னை எழுந்தது.
இது சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது தயாரிப்பு நிறுவனம். நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் `ஜனநாயகன்' படக்குழு தரப்பில் பேசிய போது "தணிக்கை குழு உறுப்பினர் புகார் அளிப்பது வழக்கத்திற்கு மாறான ஒன்று, சென்சார் போர்டு தனது முடிவை மறு ஆய்வு செய்ய முடியாது. பெரும்பான்மை உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை இல்லாவிட்டால், மட்டுமே மறு ஆய்வு செய்ய முடியும். ஓர் உறுப்பினர், எப்படி பெரும்பான்மை உறுபினர்களின் முடிவை செல்லாது எனக் கூற முடியும், ரூ.500 கோடி முதலீடு செய்து படம் எடுத்துள்ளோம். குறித்த தேதியில் படம் வெளியிடப்படவில்லை என்றால் பெரும் இழப்பு ஏற்படும்’’ என்றும் தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது. ’’ஆனால் ரூ.500 கோடியோ, ரூ.1 கோடியோ விதிமுறைகள் எல்லோருக்கும் ஒன்றுதான். நாளை மறுதினம் ரிலீஸ் எனக்கூறி சான்றிதழ் கேட்க முடியாது என்றும், திரைப்படத்தில் பாதுகாப்புப் படைகளில் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும் என்றும் தணிக்கை வாரியம் தெரிவித்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை இன்று (ஜன 9) வழங்குவதாக அறிவித்தார். அதன்படி இன்று, விஜயின் `ஜனநாயகன்' படத்துக்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது, மேலும் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பிய உத்தரவையும் ரத்து செய்தது. ஒரு வழியாக படம் வெளியாகும் என ரசிகர்கள் பெருமூச்சு விட, மீண்டும் வந்தது ஒரு முட்டுக்கட்டை. இந்த தீர்ப்பு வந்த சில நிமிடங்களிலேயே, `ஜனநாயகன்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் அளித்த உத்தரக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டது தணிக்கை வாரிய தரப்பு. இந்த திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தது. அந்த மேல்முறையீட்டு மனுவை அனுமதித்தது தலைமை நீதிபதி அமர்வு. மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தால் எப்போது விசாரணை என்பதை நான் முடிவு செய்து செய்து கூறுகிறேன் என தலைமை நீதிபதி கூறியுள்ளார். இன்று முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட `ஜனநாயகன்' பட தணிக்கை சான்றிதழ் பிரச்சனை மீண்டும் தொடர்கிறது. இதன் அடுத்த விசாரணை பற்றிய விவரங்கள் விரைவி தெரியவரும் என எதிர்பார்க்கப் படுகிறது. எது எப்படியோ படம் இன்று வெளியாகாது, சனி, ஞாயிறு நீதிமன்றம் விடுமுறை என்பதும் இதில் மேலும் ஒரு சிக்கல். இந்த வழக்கு இன்றோ அல்லது ஜனவரி 12க்கு மேல் தான் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

