ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு, ப்ரியங்கா சோப்ரா, ப்ரித்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் `வாரணாசி'. இப்படம் 2027 ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தச் சூழலில் இயக்குநர் ராஜமௌலி அளித்த பேட்டி ஒன்றில் படம் பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில், ’நீங்களும் மகேஷ்பாபுவும் பல வருடங்களாக படம் செய்ய பேசி இருந்தீர்களே, ஏன் இவ்வளவு தாமதம்’ எனக் கேட்கப்பட "நானும் மகேஷ்பாபுவும் சந்தித்த சமயத்தில் இந்திய சினிமாவே மாற தொடங்கிக் கொண்டிருந்தது. அதற்கு முன்பு வரை இயக்குநரோ, நடிகரோ ஒரு வருடத்துக்கு இரண்டு படங்கள் செய்வோம். அவ்வளவு விரைவாக பணியாற்றுவோம். அப்போது எனக்கு மூன்று பட வேலைகள் கையில் இருந்தன. அது எல்லாம் 4 வருடங்களுக்குள் முடிந்துவிடும் என நினைத்தேன். அது முடிந்த பின் மகேஷ் உடன் பணியாற்றலாம் என நினைத்திருந்தேன்.
ஆனால் 6 மாதத்தில் முடியும் என நினைத்து துவங்கிய `ஈகா' (நான் ஈ) 2 வருடங்கள் எடுத்துக் கொண்டது. பின்னர் பாகுபலி இரு பாகங்கள் எடுக்க 3 ஆண்டுகள், RRR படம் முடியவும் சில ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால்தான் நாங்கள் இணைந்து பணியாற்ற இவ்வளவு காலம் ஆகிவிட்டது" என்றார்.
’’வாரணாசி இரு பாகங்களாக வருகிறதா’’ எனக் கேட்கப்பட, "இதனை இரு பாகங்களாக எடுக்கலாம் என்ற எண்ணம் சில காலம் இருந்தது. ஆனால் பின்பு, அதனை கைவிட்டுவிட்டோம். இப்போது இரு 3 மணிநேரம் ஓடக்கூடிய ஒரே படமாகத்தான் வர உள்ளது" என்றார். ’’இந்தப் படம் வெளியாவதற்குள் இந்தியாவில் போதிய IMAX திரைகள் வந்துவிடும் என நினைக்கிறீர்களா’’ என்றதும், "இந்தியாவில் தர்ணா என்ற முறை உண்டு. நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்டவர்கள் இடத்திற்கு முன்பு சென்று போராட்டம் நடத்துவது. அப்படி LA-வில் உள்ள ஐமாக்ஸ் அலுவலகம் முன் தர்ணா செய்து, இந்தியாவில் நிறைய திரைகள் உருவாக்க சொல்லி கேட்பேன்" என்று கூறினார்.