Bhavana Anomie
சினிமா

ப்ரித்விராஜ், மம்மூட்டி எல்லோர் படங்களுக்கும் நோ சொன்னேன்! - பாவனா | Bhavana

திடீரென மலையாளம் சினிமாவிலிருந்து விலகி இருக்கலாம் என தோன்றியது. அது அந்த நேரத்து எண்ணமாக இருக்கலாம், ஆனால் அது தான் எனக்கு சௌகர்யமாக இருந்தது. `Adam Joan' படத்துக்கு பிறகு எனக்கு திருமணம் நடந்தது, நான் பெங்களூருக்கு குடி பெயர்ந்துவிட்டேன்.

Johnson

பாவனா, மலையாள சினிமாவிலிருந்து விலகி, 5 ஆண்டுகள் கன்னட படங்களில் மட்டும் நடித்தார். பல நண்பர்கள் அழைத்தும் மலையாள படங்களில் நடிக்க மறுத்தார். 2023ல் திரும்பி வந்தபோது, OTTயின் வளர்ச்சி மற்றும் புதிய மாற்றங்களை கண்ட ஒரு புதிய அனுபவமாக இருந்ததாக பேசியுள்ளார்..

மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகை பாவனா. இவர் நடித்துள்ள `Anomie' படம் ஜனவரி 30 வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் புரமோஷனுக்காக அளித்த பேட்டி ஒன்றில் 2017ல் இவருக்கு நடந்த பாலியல் சீண்டலுக்கு பிறகு மலையாள திரையுலகில் இருந்து விலகி இருந்தது பற்றியும், பின்னர் மீண்டும் மலையாள சினிமாவுக்கு திரும்பி வந்தது பற்றியும் கூறியுள்ளார்.

பாவனா அந்தப் பேட்டியில் "நான் எதையும் திட்டமிடுவதில்லை. ஆனால் அது தானாகவே நடந்தது. எனக்கு திடீரென மலையாளம் சினிமாவிலிருந்து விலகி இருக்கலாம் என தோன்றியது. அது அந்த நேரத்து எண்ணமாக இருக்கலாம், ஆனால் அது தான் எனக்கு சௌகர்யமாக இருந்தது. `Adam Joan' படத்துக்கு பிறகு எனக்கு திருமணம் நடந்தது, நான் பெங்களூருக்கு குடி பெயர்ந்துவிட்டேன். குடும்பத்தை பார்க்க கேரளா வந்தாலும் கூட, நான் இங்கு தங்கி இருக்கவில்லை என்பதும், இங்கு நடப்பது என்ன என்பதும் அறியாமல் இருப்பது நிம்மதியை தந்தது. எனவே ஒரு நீண்ட இடைவெளியை நான் விருப்பப்பட்டு எடுத்தேன்.

Adam Joan

ஆனாலும் என்னுடைய சில மலையாள சினிமா நண்பர்கள் தொடர்ந்து எனக்கு கால் செய்து, இந்தப் படத்தை செய், இந்த கதையை கேள் என சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஆஷிக் அபு, ப்ரித்விராஜ், ஜெயசூர்யா இன்னும் சொல்லப்போனால் மம்மூட்டியின் படத்தில் கூட நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் அவை எல்லாவற்றுக்கும் மறுப்பு தெரிவித்தேன். அதன் காரணம் கேட்டீர்கள் என்றால், அதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் அந்த சமயம் அதுதான் சரி என எனக்கு தோன்றியது. எனக்கு அது தேவை இல்லை, என்னுடைய உலகை விட்டு விலகி அங்கு செல்ல விரும்பவில்லை. 5 ஆண்டுகள் கன்னட படங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருந்தேன்.

அதன் பிறகு `Ntikkakkakkoru Premondarnn' படத்திற்காக என்னை அழைத்த போதும், முதலில் மறுக்க தான் செய்தேன். அந்தக் கதையையாவது கேளுங்கள் என்றார்கள், அதற்கும் மறுத்தேன். 10 நிமிடமாவது கேளுங்கள் என்றதும், இல்லை வேண்டாம் ஒருவேளை எனக்கு கதை பிடித்திருந்தால், நோ சொல்ல கடினமாக இருக்கும் எனக் கூறினேன். ஆனாலும் அவர்கள் என்னுடைய பல்வேறு நண்பர்கள் மூலமாக தொடர்பு கொண்டனர். அந்த எல்லோரும் என்னிடம் கேட்டது ஒரே கேள்வி தான், `மலையாள சினிமாவிலிருந்து விலகி இருப்பதன் மூலம் நீ என்ன சாதிக்க போகிறாய்?', அதற்கு என்னிடம் பதில் இல்லை. எப்படி மலையாள சினிமாவில் இருந்து விலகும் முடிவை உடனே எடுத்தேனோ, மீண்டும் திரும்பி வரும் முடிவையும் விரைவாகவே எடுத்தேன்.

2023ல் நான் மீண்டும் திரும்பி வந்த சமயத்தில் நிறைய நடந்திருந்தது. கொரோனா நடந்திருந்தது, OTT வந்திருந்தது. 2017ல் ஒரு படம் நன்றாக இருந்தால் ஓடும், இல்லை என்றால் ஓடாது. ஆனால் இப்போது OTT Movie என்ற புது வகை உருவாகி இருந்தது. அதாவது சில படங்களுக்கு மக்கள் தியேட்டருக்கு செல்லாமல், OTTயில் வெளியாக காத்திருக்க ஆரம்பித்துள்ளனர். அது எனக்கு தெரியாது. அப்படித்தான் என்னுடைய காம்பேக் படமான `Ntikkakkakkoru Premondarnn' படமும் தியேட்டரில் பெரிதாக போகவில்லை என்றாலும், OTTயில் பெரியதாக கவனிக்கப்பட்டது" எனக் கூறியுள்ளார்.