ஜாக்கி சான் (Jackie Chan), கிறிஸ் டுக்கர் (Chris Tucker) நடிப்பில் பிரெட் ராட்னர் (Brett Ratner) மூன்று பாகங்களாக இயக்கிய படம் `Rush Hour'. ஆக்ஷன் + காமெடி கலந்த படமாக உருவான இதன் மூன்று பாகங்களும் உலகம் முழுக்க மிகப் பிரபலமானது. தமிழ் டப்பிங்கிலும் இந்தப் படங்கள் கோலிவுட் ரசிகர்களிடம் தனிக்கவனம் பெற்றன. இப்போது Rush Hour படத்தின் 4வது பாகத்தை எடுக்க இருக்கிறார்கள் எனவும், இதன் பின்னணியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இயக்குநர் பிரெட் ராட்னர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 2014ல் வெளியான `Hercules'. இதன்பிறகு படம் எதுவும் இயக்காமல் இருந்தார். 2017ல் துவங்கிய Me Too movementன் போது நடிகைகள் Olivia Munn மற்றும் Natasha Henstridge உட்பட ஆறு பெண்கள் ராட்னர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை ராட்னர் மீது வைத்தனர். இதனை ராட்னர் தொடர்ந்து மறுத்து வந்தாலும், அவருடனான பட ஒப்பந்தங்களை ரத்து செய்தது Warner Bros. அதன் பின் சினிமா எதுவும் இயக்காமல் இருந்தவர், தற்போது டொனால்ட் டிரம்ப் மனைவி Melania Trumpன் பயோபிக்கை இயக்கி வருகிறார். இதன் மூலம் டிரம்ப் குடும்பத்திற்கு நெருக்கமாகி இருக்கிறார் ராட்னர்.
இந்த நட்பின் மூலமாக தான் Rush Hour 4 படத்தின் பணிகள் துவங்கி இருப்பதாகவும், படத்தை பாராமௌன்ட் நிறுவனம் விநியோகம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பாராமௌன்ட் நிறுவனத்தின் புதிய CEO டிரம்ப்பின் ஆதரவாளரான Larry Ellisonன் மகன் David Ellison. எனவே Rush Hour 4 படம் விரைவில் துவங்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த நான்காவது பாகத்திலும் ஜாக்கி சான் மற்றும் கிறிஸ் டுக்கர் தான் நடிக்க உள்ளார்களாம்.