பிரபல இந்திய அமெரிக்க இயக்குநர் மீரா நாயர். இவர் அடுத்ததாக இந்திய ஓவியரான அம்ரிதா ஷெர்-கில் பயோபிக் படத்தை இயக்குகிறார். 1921லிருந்து 41 வரை ஓவிய உலகில் பெரிய பயணம் செய்தவர் அம்ரிதா. Two Women, The Bride’s Toilet மற்றும் Self-Portrait என இவரின் பல ஓவியப் படைப்புகள் புகழ் பெற்றவை. இந்தியாவின் Frida Kahlo என்றும் அழைக்கப்பட்டவர்.
தற்போது இவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம் 'அம்ரி' (Amri) என்ற பெயரில் ஆங்கிலத்தில் உருவாகிறது. இதில் அம்ரிதா ஷெர்-கில் கதாபாத்திரத்தில் `பேட் கேர்ள்' படத்தில் நடித்த அஞ்சலி சிவராமன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், ஜெய்தீப் அஹ்லாவத், எமிலி வாட்சன், அஞ்சனா வாசன், ஜிம் சர்ப் மற்றும் கிரிஸ்டியன் சாக்வாரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்க இணைந்துள்ளனர்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹங்கேரி, பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் நிகழும் இக்கதையில், ஷெர்-கிலின் ஐரோப்பியப் பயிற்சி, அவர் இந்தியாவுக்குத் திரும்புதல், மற்றும் அன்றாட இந்திய வாழ்க்கை, குறிப்பாகப் பெண்களை மையமாகக் கொண்ட ஒரு தனித்துவமான காட்சி மொழியை அவர் வளர்த்துக்கொண்டது உள்ளிட்ட அவரது கலை மற்றும் தனிப்பட்ட பயணத்தை அம்ரி படம் விவரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இந்தியா மற்றும் ஹங்கேரியில் நடைபெற்று வருகிறது. அம்ரிதாவின் ஓவியப்படைப்புகளின் சர்வதேச கண்காட்சி 2027ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதே சமயத்தில் இப்படமும் வெளியாக உள்ளதாக தகவல்.