ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. மறு ஆய்வுக்காக அனுப்பப்பட்ட படத்தின் வெளியீடு தாமதமாகி, விஜய் ரசிகர்கள் தீர்ப்பை ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி, ஜனநாயகன் படத்தில் சில மாற்றங்களுடன் யு/ஏ சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கைக் குழு பரிந்துரைத்தது. அதன்படி, பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களை செய்து கடந்த மாதம் 24ஆம் தேதி படக்குழு சமர்பித்தது. இதை தொடர்ந்து 29ஆம் தேதி யு/ஏ சான்றிதழ் வழங்க சம்மதம் தெரிவிக்கப்பட்டது. திடீரென ராணுவம் தொடர்பான காட்சிகள் குறித்து புகார் வந்துள்ளதாக கூறி, படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு கடந்த 6ஆம் தேதி தணிக்கைக் குழு தலைவர் அனுப்பினார்.
இதை எதிர்த்து ஜனநாயகன் தயாரிப்புக் குழு நீதிமன்றத்தை நாடியது. திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ஜனவரி 9ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா, உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால், அன்று மாலையே தணிக்கைக் குழு மேல்முறையீடு செய்ய, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தலைமை நீதிபதி அமர்வு இடைக்கால தடை விதித்தது. இதனால் ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.
அதன்பிறகு 12ஆம்தேதி சென்னை உயர் நீதிமன்றத்தடையை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. 15ஆம் தேதி மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கில் தலையிட மறுத்து, உயர்நீதிமன்றமே விசாரிக்க அறிவுறுத்தியது. அதன்படி 20ஆம் தேதி மீண்டும் உயர்நீதிமன்றத்திடமே வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்குமா...படம் வெளியாகுமா... என்று உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளனர் விஜய் ரசிகர்கள். இன்று ஜனநாயகன் பட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.