தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று அதிகாலை காலமானார். இதைத் தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு முதல்வர் விஜய், அமைச்சர்கள், பிறகட்சித் தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக சென்னையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது. இதற்காக தேனி மாவட்டம், வத்தலகுண்டு அருகே காட்ரோடு பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில், முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக பாரதிராஜாவின் உடல்வைக்கப்பட்டது.
பாரதிராஜாவின் உடலுக்கு இன்றும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என திரளானோர் அஞ்சலி செலுத்தினர். அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார், வன்னி அரசு ஆகியோர் மலர் வளையம் வைத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து, பாரதிராஜாவின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. பின்னர், காவல் துறையினர் பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு, அணிவகுப்புடன் அவரது உடல், அடக்கம் செய்யும் இடத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. அப்போது 72 குண்டுகள் முழங்க அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் பண்ணை வீட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சீமான், பாக்யராஜ், பார்த்திபன், வைரமுத்து, வடிவேல் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும், அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் இறுதிவரை நின்று அவருடைய நல்லடத்திற்கான பணியைச் செய்தனர்.