தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் File image
சினிமா

விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய தனுஷ், ஐஸ்வர்யா.. நேரில் ஆஜராக உத்தரவு!

PT WEB

செய்தியாளர் - வி.எம்.சுப்பையா

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான நடிகர் தனுஷ், நடிகர் ரஜினியின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து வந்தார். அவர்களுடைய காதலுக்கு இரண்டு குடும்பங்களில் இருந்தும் பச்சைக்கொடி காட்ட, கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18 தேதி தனுஷ் - ஐஸ்வர்யா திருமணம் சென்னையில் நடந்தது. இவர்களுக்கு, இரண்டு மகன்களும் உள்ளனர்.

Dhanush Aishwarya

சுமார் 20 ஆண்டுகால திருமண வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த சில ஆண்டுகளாக தனுஷும், ஐஸ்வர்யாவும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக, கடந்த 2022ம் ஆண்டு இருவரும் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், தாங்கள் பிரிந்து உள்ளதாக அறிவித்தனர்.

இந்த நிலையில், இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை ரத்து செய்து அறிவிக்க வேண்டும் கோரியுள்ளனர்.

இந்த மனு சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி எஸ்.சுபா தேவி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்ற நீதிபதி நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அக்டோபர் 7 தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.