சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கிய ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம், 90களின் விக்ரமன், 80களின் முத்துராமன் படங்களை நினைவூட்டும் குடும்ப ஃபீல்குட் முயற்சியாக உருவாகியுள்ளது. ‘கருப்பு’ வெற்றிக்குப் பிறகு வரும் இந்த படம், 42 வயது ஆண் மற்றும் 22 வயது பெண்ணின் உறவை மையமாகக் கொண்டு, அம்மா, சகோதரன் போன்ற குடும்ப உறவுகளை உணர்ச்சியுடன் காட்டுகிறது.
சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்'. சூர்யாவின் 46வது படமான இதில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
`கருப்பு' படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானதைத் தொடர்ந்து, சூர்யாவின் அடுத்த படம் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார் என்பதால் அந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி உள்ளது.
இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்திருக்கும் நிலையில், படம் சார்ந்த நேர்காணலில் பங்கேற்று பேசியுள்ளார் இயக்குநர் வெங்கி அட்லூரி.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் இயக்குநர் வெங்கி அட்லூரி, “என்னுடைய ஆரம்ப படங்கள் ஒரே மாதிரியானவை என்ற விமர்சனம் எழுந்தபிறகு தான் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தை உருவாக்கினேன். தற்போது கடந்த 5 ஆண்டுகளாக டார்க்கான அடித்தடி, ரத்தம் சார்ந்த படங்கள் அதிகம் வந்துவிட்டதால் ஒரு குடும்ப படம் ஒன்றை இயக்க வேண்டும் என நினைத்தேன். 90களில் விக்ரமன் சார் இயக்கிய படங்கள், 80களில் முத்துராமன் சார் இயக்கிய படங்கள் போல ஒரு ஃபீல்குட் படங்களை எடுக்க வேண்டும் என முயற்சி செய்துள்ளேன்.
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பொறுத்தவரையில் ‘இப்படியான ஒரு அம்மா, மம்தா பைஜூ போன்ற ஒரு பெண், சூர்யா சார் போன்ற ஒரு சகோதரன் நம்முடைய குடும்பத்தில் இருக்கவேண்டுமே என நினைக்கவைக்கும் ஒரு படமாக இருக்கும். 2020-ல் வெளிவந்த அல வைகுண்டபுரம் மாதிரியான படமாக இருக்கவேண்டும் என்று செய்துள்ளோம். படத்தின் கதை 42 வயதுடைய நபர் மற்றும் 22 வயதுடைய பெண் இருவருக்குமான ரிலேசன்ஷிப்பை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். ஆனால் அது ரொமாண்டிக் உறவா? இல்லையா? என்பதை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்” என பேசியுள்ளார்.