இயக்குநர் தேசிங் பெரியசாமி
இயக்குநர் தேசிங் பெரியசாமி ட்விட்டர்
சினிமா

இயக்குநர் தேசிங் பெரியசாமியிடம் கையாடல்... கொலை மிரட்டலும் விடுத்த உதவி இயக்குநர்!?

விமல் ராஜ்

சென்னை செய்தியாளர் - ஆனந்தன்

சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் இயக்குநர் தேசிங் பெரியசாமி (40). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு துல்கர் சல்மான், கௌதம் வாசுதேவ் மேனன், ரக்‌ஷன், ரிது வர்மா, நிரஞ்சனி ஆகியோர் நடிப்பில் வெளியான "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" படத்தை இயக்கியவர்.

தேசிங் பெரியசாமி - துல்கர் சல்மான்

காவல்நிலையத்தில் புகார் அளித்த இயக்குநர் தேசிங்..

இந்நிலையில் இவர் நேற்று சென்னை அண்ணா நகர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் "நான் தமிழ் சினிமாவில் இயக்குநராக இருக்கிறேன். என்னிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் முகமது இக்பால் என்பவர் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார்.

இயக்குநர் தேசிங்கிற்கு கொலை மிரட்டல் விடுத்த உதவி இயக்குநர்!

பணியில் சேர்ந்த நாள் முதல் என் வீட்டு வரவு செலவு கணக்குகளை உதவி இயக்குநர் முகமது இக்பால் கவனித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுமார் 150 கிராம் தங்க நகைகளை முகமது இக்பாலிடம் கொடுத்து அண்ணாநகரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்று வாருங்கள் என கூறியிருந்தேன். அப்படி நகையை அடகு வைத்துக் கிடைத்த 3 லட்ச ரூபாயை முகமது இக்பால் கையாடல் செய்துவிட்டார்.

இயக்குநர் தேசிங் பெரியசாமி

பணம் குறித்துக் கேட்டபோது எனக்கும் என் மனைவிக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரியுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிங் பெரியசாமி தற்போது சிம்பு நடிப்பில் STR 48 படத்தை இயக்கி வருகிறார். வரலாற்று படமாக உருவாகி வரும் இந்த சரித்திர படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.