இந்திய சினிமாவின் முக்கிய நடிகரான பிரகாஷ் ராஜ், தன்னை நாத்திகன் என்று கூறியிருந்தாலும், கிறிஸ்தவ நம்பிக்கையாளர் ஆன தாயார் சுவர்ணலதாவின் இறுதி சடங்கை தேவாலயத்தில் மத ரீதியாக நடத்தினார். இதை வைத்து சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு, பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய சினிமாவில் முக்கியமான நடிகர் பிரகாஷ்ராஜ். பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான `டூயட்' படம் மூலம் தமிழில் அறிமுமானவர் 400-க்கு மேற்பட்ட படங்களில், 6 மொழிகளில் உருவான படங்களில் நடித்துள்ளார்.
தன்னுடைய வெளிப்படையான மற்றும் தைரியமான பேச்சுக்கு பெயர்போனவரான பிரகாஷ் ராஜ், எப்போதும் தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளார். அந்தவகையில் தான் ஒரு நாத்திகன், கடவுள் மறுப்பாளன் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள், தாயின் இறுதி சடங்கை மத ரீதியில் நடத்தியது எப்படி என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
அதற்கும் தன்னுடைய வழக்கமான பாணியில் பதிலடி கொடுத்துள்ளார் பிரகாஷ் ராஜ்.
நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் சுவர்ணலதா, இந்த வாரத் தொடக்கத்தில் காலமானார். கிறிஸ்தவ மத நம்பிக்கைகளைப் பின்பற்றிய தாயின் மரணத்திற்கு பிறகு, ஒரு தேவாலயத்தில் பாரம்பரிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டார். இறுதிச் சடங்கின் காட்சிகள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, பிரகாஷ் ராஜ் தன்னை ஒரு நாத்திகர் என்று முன்பு கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டி, X தளத்தில் சிலர் விமர்சித்தனர்.
எக்ஸ் தள பயனர் ஒருவர், ‘பிரகாஷ் ராஜ் தன்னை ஒரு நாத்திகர் என்றும், கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றும் கூறிக்கொள்கிறார். ஆனால், தனது தாயின் இறுதிச் சடங்குகளை கிறிஸ்தவ மரபுகளின்படியே செய்கிறார்’ என்று விமர்சித்திருந்தார்.
அதற்கு பதிலளித்திருக்கும் பிரகாஷ் ராஜ், “ஆம், எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை தான். ஆனால் என் தாய்க்கு கடவுள் நம்பிக்கை உண்டு. அவரது நம்பிக்கையை மறுக்க நான் யார்? அவரது நம்பிக்கையின்படி தானே உடலை அடக்கம் செய்ய முடியும். இதுதானே ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அடிப்படையான மரியாதை. வெறுப்பை தூண்டுபவர்கள் இதை புரிந்து கொள்வார்களா?” என்று பதிலடி கொடுத்துள்ளார்.