கூலி படம் - சென்னை உயர்நீதிமன்றம் முகநூல்
சினிமா

கூலி படத்துக்கு யு.ஏ சான்றிதழ் கோரிய வழக்கு.. தணிக்கை வாரியம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு !

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

PT WEB

கூலி திரைப்படத்தை U/A சான்றிதழுடன் திரையிட அனுமதிக்கக் கோரி சன் பிக்சர்ஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், தணிக்கை வாரியம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள `கூலி' ஆகஸ்ட் 14 வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும் வசூலில் பெரிய குறை ஏதும் இல்லை. கடந்த ஆறு நாட்களில் இந்திய அளவில் படம் 200 கோடி வசூலை கடந்துள்ளது. உலகம் முழுக்க 404 கோடி வசூலித்துள்ளதாக ஆகஸ்ட் 18ம் தேதி அறிவித்தது சன் பிக்சர்ஸ்.

கூலி திரைப்படம்

ஆனாலும் படம் ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் படம் பார்ப்பதில் ஒரு தடை உள்ளது. முதல் வாரத்தில் ரசிகர்கள், இளைஞர்கள் கூட்டம் வந்துவிட்டதால் வசூல் பெரிய அளவில் இருந்தது எனவும், இரண்டாம் வார துவக்கத்தில் வசூல் சற்று குறைய தொடங்குவதாக சொல்லப்படுகிறது. இந்த பிரச்னையை சரி செய்ய `கூலி' படத்தை சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்துள்ளனர்.

எனவே தணிக்கை சான்றிதழ் No children under 16 (NC-16) என்பதிலிருந்து PG-13 (Parents strongly cautioned) என மாற்றப்பட்டுள்ளது. 2 மணிநேரம் 48 நிமிடங்கள் ஓடக்கூடிய `கூலி' படம் தற்போது 2 மணிநேரம் 44 நிமிடங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் படத்திற்கு குழந்தைகள், கும்பங்களின் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் இப்படத்திற்கு யு ஏ சான்றிதழ் பெற முயற்சிகள் நடந்து வந்த நிலையில், கூலி திரைப்படத்தை U/A சான்றிதழுடன் திரையிட அனுமதிக்கக் கோரி சன் பிக்சர்ஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

coolie

இந்த வழக்கில், தணிக்கை வாரியம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. A சான்றிதழ் காரணமாக 18 வயதுக்கு குறைந்தவர்கள் திரைப்படத்தை பார்க்க முடியவில்லை என தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் தெரிவித்தார். சில காட்சிகளை நீக்கினால் U/A சான்று வழங்குவதாக தணிக்கை வாரியம் தரப்பு வழக்கறிஞர் கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் என்பது குரிப்பிடத்தக்கது.