Madhavan Dhurandhar 2
பாலிவுட் செய்திகள்

சிகரெட்டால் சர்சையில் சிக்கிய `துரந்தர் 2'.. விளக்கம் அளித்த மாதவன்! | Madhavan | Dhurandhar 2

நான் சிகரெட் பிடிப்பதாகக் கருதி சிலர் மனதைப் புண்படுத்தியதை அறிந்தேன். இது முற்றிலும் உண்மையல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அந்த வசனங்களைப் பேசும்போது, என்னை விடவும் இது போன்ற விஷயங்களில் அதிக அக்கறை கொண்டவர் ஆதித்யா தர்.

Johnson

ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் `துரந்தர்'. அக்‌ஷய் கண்ணா, சஞ்சய் தத், அர்ஜூன் ராம்பால், மாதவன், சாரா அர்ஜூன் எனப் பலரும் இதில் நடித்திருந்தனர். ஸ்பை த்ரில்லர் படமாக உருவான இப்படம் உலகளவில், ரூ.1300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகமான `துரந்தர் தி ரிவென்ஞ்' மார்ச் 19 வெளியானது. இப்படமும் வசூல் சாதனையை செய்து வருகிறது.

ரஜினிகாந்த் உட்பட பிரபலங்கள் பலரும் இப்படத்தைப் பாராட்டி வரும் வேளையில், இப்படத்தின் மீது ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. மாதவன் மற்றும் ரன்வீர் சிங் நடித்த ஒரு குறிப்பிட்ட காட்சியில், சீக்கிய மதத்தவரின் பத்து குருக்களில் பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனித குருவுமான குரு கோவிந்த் சிங் எழுதிய தசம் கிரந்தத்தின் வரிகளை மாதவன் சொல்வது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது. இதில், நிகழ்ந்துவிட்டதாக அந்த சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்தக் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவசேனா (ஷிண்டே பிரிவு) தலைவரும், 'மகாராஷ்டிராவில் உள்ள சீக்கியர்கள்' குழுவின் தலைவருமான குர்ஜோத் சிங் கீர், மும்பையின் முலுண்ட் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளார். இந்தப் புகாரில் மாதவன், ரன்வீர் சிங் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆதித்யா தர் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு , அவர்கள் குர்பானியை அவமதித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் தனது எதிர்ப்புகளை விளக்கும் ஒரு வீடியோவைப் பகிர்ந்த குர்ஜோத், “துரந்தர் 2 படக்குழுவினர் குர்பானிக்குக் காட்டியுள்ள அப்பட்டமான அவமரியாதையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மாதவன் நடித்த ஒரு கதாபாத்திரம், ரன்வீர் சிங் உடன் சிகரெட்டைப் பிடித்தபடி புனிதமான குர்பானியை ஓதுவதாகக் காட்டியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. குர்பானி என்பது வெறும் உரையாடல் அல்ல, அது தெய்வீகமானது, புனிதமானது, மற்றும் சீக்கிய சமூகத்திற்கு மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது.

இத்தகைய சித்தரிப்பு நமது நம்பிக்கையின் மீதான அறியாமையையும் உணர்வின்மையையும் பிரதிபலிக்கிறது. சீக்கிய சமூகம் ஒன்றுபட்டு நின்று இந்த அவமதிப்பை அமைதியான முறையில் எதிர்த்துப் போராட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இதற்குப் பொறுப்பானவர்களான ஆதித்யா தர், ஆர்.மாதவன் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் SGPC மற்றும் சீக்கிய சமூகத்திடம் மனப்பூர்வமான மன்னிப்புக் கோரத் தவறினால், அவர்களுக்குக் கறுப்புக் கொடிகளைக் காட்டுங்கள். ஒவ்வொரு மதத்தையும் மதியுங்கள். இது படைப்பாற்றல் அல்ல, இது அவமதிப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி அப்படத்தில் நடித்த மாதவன் வீடியோ விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எங்கள் படத்திற்கு இவ்வளவு அன்பைக் கொடுத்ததற்கு துரந்தர் குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றிகள். சமீபத்தில். குரு கோவிந்த சிங்கின் தசம் கிரந்தத் வரிகளை சொல்லும்போது நான் சிகரெட் பிடிப்பதாகக் கருதி சிலர் மனதைப் புண்படுத்தியதை அறிந்தேன். இது முற்றிலும் உண்மையல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அந்த வசனங்களைப் பேசும்போது, என்னை விடவும் இதுபோன்ற விஷயங்களில் அதிக அக்கறை கொண்ட ஆதித்யா தர். சிகரெட்டை அணைத்துவிடுமாறு எனக்குத் தெளிவாக அறிவுறுத்தியிருந்தார். திரையில் புகை எதுவும் தெரியக்கூடாது என்பதையும், அந்த வசனங்களைப் பேசும்போது நான் சிகரெட்டைப் பிடித்திருக்கக் கூடாது என்பதையும் அவர் உறுதி செய்தார்.

நடிகர் மாதவன்

ஏனெனில், அவை எனக்குப் புனிதமானவை மற்றும் தூய்மையானவை. நான் சிகரெட்டை முறையாக அணைத்துவிட்டேன், என் வாயிலிருந்து புகை வரவில்லை. மேலும் அந்தக் காட்சி முழுவதும் சிகரெட்டின் எந்தத் தடயமும் இல்லை. நாங்கள் தெரிந்தோ தெரியாமலோ யாரையும் காயப்படுத்த விரும்ப மாட்டோம். நாங்கள் எப்போதும் முழு சீக்கிய சமூகத்திற்கு துணை நிற்போம். அவர்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஒவ்வொரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பும். நான் தனிப்பட்ட முறையில் பொற்கோயிலுக்குச் செல்வேன் என்பது அனைவருக்கும் தெரியும். நான் மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புவது என்னவென்றால், காட்சியின் தொடக்கத்தில் என் கையில் சிகரெட் இருந்தது. ஆனால் காட்சி தொடங்கியதும், நான் அதை முறையாக அணைத்துவிட்டேன். நான் வசனங்களைப் பேசும்போது கூட, புகை சிறிதும் தென்படவில்லை. நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் கூறப்படும் குற்றச்சாட்டை நாங்கள் நிச்சயமாகச் செய்யவில்லை" என தெரிவித்துள்ளார்.