சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர் நடிப்பில் அஸ்வினி திவாரி இயக்கியுள்ள படம் `சிஸ்டம்'. இதில் ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் மே 22ம் தேதி ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தற்போது இதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இந்த படம் பற்றி இயக்குநரும் இணை எழுத்தாளருமான அஸ்வினி திவாரி கூறுகையில் “நான் சொல்லும் ஒவ்வொரு கதையும் ஒரு தைரியமான முயற்சிதான். என்னை சவாலுக்கு உள்ளாக்கும் கதைகளே என்னை ஒரு படைப்பாளியாக வளர்த்திருக்கின்றன. `சிஸ்டம்' திரைப்படமும் அதேபோல உண்மைத்தன்மையுடன் உருவான ஒரு படைப்பு. சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜோதிகா போன்ற வலிமையான நடிகைகள் இப்படத்தின் மையமாக இருப்பதால், இந்த படம் மக்களை வெறும் பொழுதுபோக்கைத் தாண்டி சிந்திக்க வைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
நேகா என்ற அரசு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோனாக்ஷி சின்ஹா கூறுகையில் “இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. ஒரு நடிகையாக என்னை சவாலுக்கு உட்படுத்தும் கதைகளை நான் எப்போதும் விரும்புவேன். Dahaad படத்திற்குப் பிறகு சிஸ்டம் போன்ற வித்தியாசமான கதையில் நடிக்கும் வாய்ப்பை ப்ரைம் வீடியோ எனக்கு வழங்கியுள்ளது. இது ஒரு சாதாரண நீதிமன்ற நாடகம் மட்டுமல்ல; சமூகத்தில் நீதியும் சமூக அமைப்புகளும் எவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை பிரதிபலிக்கும் ஒரு படம்” என்றார்.
சரிகா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜோதிகா கூறுகையில் “பல அடுக்குகள் கொண்ட இந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்வது சவாலானது, அதே நேரத்தில் உற்சாகமாக இருந்தது. சமத்துவமின்மை மற்றும் அதிகாரம் ஒன்றாக வாழும் நவீன இந்தியாவை இந்த படம் பேசுகிறது. அஸ்வினி மிகவும் தெளிவான மற்றும் உண்மைத்தன்மை கொண்ட கண்ணோட்டத்துடன் இந்தக் கதையை உருவாக்கியுள்ளார்.” என்றார்.