Shreya Ghoshal Singer
பாலிவுட் செய்திகள்

"அந்த சூழல் வந்தால் பாடுவதையே நிறுத்திவிடுவேன்!" - அழுத்தமாக சொன்ன ஸ்ரேயா கோஷல் | Shreya Ghoshal

நான் ஒன்றும் 20 வயது நபர் இல்லை. எனவே என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது என்பதை நான் அறிவேன். மன ரீதியாக வலிமையானவராக இருப்பது மிக முக்கியம்.

Johnson

பிரபல இந்திய பாடகி ஸ்ரேயா கோஷல். 20 மொழிகளில் கிட்டத்தட்ட 2,000 பாடல்கள் பாடியுள்ள இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ’இசைக் கச்சேரிகளில் பாடகர்கள், பாடலை ஒலிக்கவிட்டு அதற்கு லிப் சிங் செய்யும் பழக்கம் அதிகரித்துள்ளது’ பற்றி கேட்கப்பட, "சில பாடகர்கள் மேடையில் பாடுகையில் லிப் சிங்கிங் (lip-syncing) முறையில் பாடுகிறார்கள். ஏனெனில், அவர்களுக்கு மேடையில் பாடுவது உகந்ததாக இருப்பதில்லை என நினைக்கிறேன். அது அவர்களது பாணி. ஆனால், அது எனக்கு மிகவும் சிரமமானது. ஒருவேளை, நான் அப்படிச் செய்ய வேண்டிய சூழல் வந்தால், அன்றே நான் பாடுவதை நிறுத்திவிடுவேன். எனது குரல் வளம் எனக்குத் துணையாக இருக்கும்வரை தொடர்ந்து இசைப் பயிற்சியில் ஈடுபட்டு, மேடையில் நின்று பார்வையாளர்களுக்காக நேரடியாகப் பாடுவதையே விரும்புகிறேன். மேடை ஏறி பாடுவது சிரமமானதாக தோன்றலாம். அதற்கான பயிற்சி இருந்தால், அது எளிமையானதே.

Shreya Ghoshal

நான் ஒன்றும் 20 வயது நபர் இல்லை. எனவே என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது என்பதை நான் அறிவேன். மன ரீதியாக வலிமையானவராக இருப்பது மிக முக்கியம். ஏனெனில், எல்லா நாளும் சிறந்த நாளாக இருக்காது. நீங்கள் ஒரு Entertainer ஆக இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் உங்களிடமிருந்து இசையைக் கேட்க விரும்புவார்கள். உங்களிடமிருந்து தாக்கத்தை எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். இசை அவர்களைச் சுகப்படுத்தும். அவர்களின் வாழ்க்கையில் உள்ள துன்பங்களிலிருந்து விடுதலை அளிக்கும். எனவே கலைஞர்களிடம் பெரிய பொறுப்பு உண்டு என நம்புகிறேன். எனவே, இது கடவுளின் ஆசிர்வாதம் என நினைக்கிறேன்" என்றார்.

’இப்போது AIயின் வளர்ச்சி அதிகமாகி இருக்கிறது, இது வரமா? சாபமா’ எனக் கேட்கப்பட, "AI தவிர்க்கவே முடியாதது. அது எந்த துறையானாலும் சரி. ஆனால் மிகத் திறமையான நபர்களை AIயால் நீக்க முடியாது. எனவே, உங்கள் திறமையை வளர்த்துக் கொள்வது முக்கியம். AI என்பது மனிதர் அல்ல. அது மனிதன்போல இருக்க முயற்சிக்கும். ஆனால், ஒருபோதும் மனிதனாக முடியாது. ஒரு விஷயத்துக்கு நீங்கள் எதிர்வினையாற்றுவது உங்களின் சுயமான முடிவு. ஆனால் AI உங்களைப்போல செய்யத்தான் முயலும். அதனால் அசலான ஒன்றை உருவாக்க முடியாது" என்றார்.

Arijith Singh

’பிரபல பாடகர் அரிஜித் சிங் சினிமாவில் இனி பாடப்போவதில்லை என முடிவெடுத்தது’ பற்றி கேட்கப்பட, "எனக்கும் சில சமயங்களில் இசையிலிருந்து ஓர் இடைவேளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றும். ஆனால் என்னால் அப்படி முடிவெடுக்க முடியவில்லை. அரிஜித் சிங் இசையிலிருந்து ஓர் இடைவேளை எடுத்துக்கொள்ள எடுத்த முடிவு மிகவும் துணிச்சலானது. அவர் இதயபூர்வமாக இசையை நேசிக்கும் ஒரு கலைஞர். தான் ஏன் இசையமைக்கிறோம் அல்லது அதன மூலம் தனக்கு என்ன கிடைக்கும் என்பதைப் பற்றியெல்லாம் அவர் சிந்திப்பதில்லை. அவருக்கு எதைச் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறதோ, அதை மட்டுமே அவர் செய்கிறார். அதனால்தான் மக்கள் அவரை நேசிக்கின்றனர். அவரைப் பொறுத்தவரை, இசைதான் மற்ற எல்லாவற்றையும் விடப் பெரியது. இப்போதும் கூட அவர் இசை சம்பந்தப்பட்ட எதையாவதுதான் செய்து கொண்டிருப்பார். திரைப்படங்களில் இல்லாவிட்டாலும் இசையுடன்தான் ஒன்றி இருப்பார்" என்றார் ஸ்ரேயா கோஷல்.