தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். இவர் தமிழ் மட்டுமல்லாது இந்தியிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அப்படி இப்போது அவரின் அடுத்த இந்திப் படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இப்படம் காட்டை மையப்படுத்திய புராணக் கதையாக உருவாகிறது எனவும், இப்படத்தை `இரும்புத்திரை', `ஹீரோ', `சர்தார்' போன்ற படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்க உள்ளார் எனவும் தகவல். இந்தப் படத்தின் மூலம் இந்தித் திரையுலகில் அறிமுகமாவதோடு, தனுஷுடன் முதல் முறையாகவும் பணியாற்றுகிறார் மித்ரன்.
முதலில் பன்சாலி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்காக 'ரவுடி ரத்தோர் 2' படத்தின் வேலைகளில் பி.எஸ்.மித்ரன் ஈடுபட்டு வந்ததாகவும், அந்த திட்டம் கைகூடாததால், வேறு கதையை உருவாக்க துவங்கி இந்தப் புது கதையை உருவாக்கி இருக்கிறாராம். முன்னர், இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்க பேச்சுவார்த்தை நடந்தது, பின்னர் தனுஷை நடிக்க வைக்க முடிவு செய்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனந்த் எல்.ராய் இயக்கிய 'ராஞ்சனா', 'அத்ரங்கி ரே' மற்றும் சமீபத்திய 'தேரே இஷ்க் மே' படங்கள் மூலம் பாலிவுட்டில் பிரபலமானார் தனுஷ். ஆனால் அந்தப் படங்களைவிட மிகப் பிரம்மாண்டமாக இந்தப் படம் உருவாக உள்ளது. இதன் படப்பிடிப்பு 2027ஆம் ஆண்டின் முதல் பாதியில் தொடங்கும்படி திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது தனுஷ் நடித்துள்ள `கர' ஏப்ரல் 30 வெளியாகவுள்ளது. தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமியின் 'D55' படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து 'லப்பர் பந்து' இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து, மாரி செல்வராஜ் ஆகியோர் படங்களிலும் வெற்றிமாறனின் 'வட சென்னை 2' படத்திலும் நடிக்கவுள்ளார். இவற்றுக்குப் பிறகு இந்த பாலிவுட் படம் நடக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
பன்சாலி புரொடக்ஷன்ஸ் 'துரந்தர்' நடிகை சாரா அர்ஜுன் நடிப்பில் பிரபல பாலிவுட் நடிகை மதுபாலாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தையும், 'ஜெய் சோமநாத்' என்ற வரலாற்றுப் படத்தையும் தயாரிக்க உள்ளது. கூடவே, பன்சாலி இயக்கிவரும் `லவ் & வார்' படத்தையும் தயாரித்து வருகிறது.