நிதேஷ் திவாரி இயக்கும் ‘ராமாயணா’ படத்தில் சீதையாக நடித்த சாய் பல்லவி, கடவுளாக நடிப்பது எளிதல்ல என்று டெல்லியில் நடந்த ட்ரெய்லர் அறிமுக விழாவில் கூறினார். இதிகாசக் கதாபாத்திரம் என்பதால் மனமும் ஆன்மாவும் முழுவதும் ஈடுபட்டு பணியாற்ற வேண்டியிருப்பதாகவும், இந்த வாய்ப்பு ஆசீர்வாதம் என நன்றியுடன் தெரிவித்தார்.
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கியுள்ள படம் `ராமாயணா'. இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், ஜூலை 24ம் தேதி ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. அதற்கு முன்பாக ட்ரெய்லர் அறிமுக விழா நேற்று இரவு டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய சாய் பல்லவி "இது போன்ற கதாபாத்திரங்கள் கிடைப்பது சுலபம் அல்ல. ஏனென்றால் கடவுளாக நடிப்பது சுலபமான பணி கிடையாது. ஒரு குழு அவர்களது மனதையும் ஆன்மாவையும் கொண்டு பணியை செய்து உலகின் முன் தங்களது படைப்பை கொண்டு சேர்க்க முடியும். ஏனெனில் அது ஏற்கெனவே ஒரு இதிகாசமாகவும், வரலாறாகவும் பார்க்கப்படும் ஒன்று. என்னை இந்தப் படத்தின் ஒரு பாகமாக மாற்றியதற்கு நன்றி. சீதாவாக நான் நடித்தது குறித்து சொல்வதென்றால், நான் இந்த பாத்திரத்தை தேர்வு செய்யவில்லை. இந்த பாத்திரத்தத்தில் நடிப்பதே ஆசீர்வாதம் என்று தான் சொல்வேன்.
இப்படி ஒரு விஷயத்தை திட்டமிட்டு நடத்த முடியாது. பேப்பரில் எழுதி அப்படியே நடிக்க போகிறேன் என்று செய்ய முடியாது. நான் அமைதியாக தியானத்தில் அமர்ந்து `சீதா நீங்கள் என்னுள் இருந்து இயக்குங்கள். என் மூலமாக வரும் விஷயங்கள் அனைத்தும் நீங்கள் இந்தப் படத்துக்காக விரும்பியதாக இருக்கட்டும்' என்று சொல்வேன். என்னால் முடிந்த அளவு என்னையும், என் சிந்தனைகளையும் தூய்மையாக வைத்துக் கொண்டேன். அதன் மூலம் சிறந்த நிலையில் என்னை வெளிப்படுத்திக் கொண்டேன். நான் இந்தப் படத்தில் மூன்று ஆண்டுகளாக தான் பணியாற்றுகிறேன். ஆனால் இவர்கள் அனைவரும் 10 ஆண்டுகளுக்கு நெருக்கமாக இதில் பணியாற்றுகிறார்கள். நான் மிகவும் ஆர்வமாகவும், பணிவுடனும் இருக்கிறேன்" என்றார்.