தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை கடந்த சில வருடங்களாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் CONTESTANT-களுக்கு இடையில் நடக்கும் பிரச்னைகள், பஞ்சாயத்துகளைக் கேட்டறிந்து தீர்ப்பு வழங்குவது போன்ற வேலைதான் அது. இந்த நிகழ்ச்சியின் 10-ஆவது சீசன் சமீபத்தில் தொடங்கியது. எப்போதும் இந்த நிகழ்ச்சி ஏதாவது ஒரு சர்ச்சையை உருவாக்கிவிடும். ஆனால், இம்முறை நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது.
கடந்த வாரம் சனிக்கிழமை ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின்போது, “தலைவன் என்றால் என்னவென்றே தெரியாமல், தலைமைத்துவம் என்றால் என்னவென்றே தெரியாமல், வாய்க்கு வந்ததுபோல வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்னைகளும் பொறுப்பும் வரும்போது, எதிரணி மீது பழியைத் தூக்கிப் போட்டு, அங்கிருந்து தெறித்து ஓடுவது என்பது தலைவனுக்கான பண்பு இல்லை. அது ஏமாற்று வேலை!” என கண்டஸ்டண்ட் ஒருவருக்கு அட்வைஸ் கொடுத்திருந்தார் விஜய் சேதுபதி.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பலரும் விஜய் சேதுபதி மறைமுகமாக முதல்வர் விஜய் குறித்துத்தான் பேசியதாக கருத்து தெரிவித்தனர். முதல்வர் விஜயின் தீவிர ரசிகர்களும், விஜய் சேதுபதியை வறுத்தெடுத்ததுடன், அந்த தனியார் தொலைக்காட்சிக்கும், அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கும் எதிராக கருத்துகளையும் மீம்ஸ்களையும் வெளியிட்டு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தனது எக்ஸ் தளப் பதிவில் இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்திருக்கிறது. அந்தப் பதிவில், பிக் பாஸ் தமிழ் சீசன் 10 என்பது, அதன் வழக்கமான நிகழ்ச்சி வடிவமைப்பு, கருப்பொருள் மற்றும் விளையாட்டு விதிமுறைகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும்.
நிகழ்ச்சியில் இடம்பெறும் சூழ்நிலைகள், உரையாடல்கள், கருத்துகள், வெளிப்பாடுகள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு இடையேயான தொடர்புகள் அனைத்தும் நிகழ்ச்சியின் கதைக்களத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட வேண்டும். எந்தவொரு கருத்தும் அல்லது குறிப்பும், நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள தனிநபர்கள், அமைப்புகள், நிறுவனங்கள், கொள்கைகள் அல்லது சூழ்நிலைகளைப் பிரதிபலிப்பதாகவோ, ஆதரிப்பதாகவோ அல்லது அவற்றைப் பற்றிய கருத்தாகவோ கருதப்படக் கூடாது. நிகழ்ச்சியின் பொழுதுபோக்கு நோக்கத்தையும், அதன் நிகழ்ச்சி சார்ந்த சூழலையும் தாண்டி மேற்கொள்ளப்படும் எந்தவொரு விளக்கமும் அல்லது தொடர்புபடுத்தலும் நிகழ்ச்சியின் நோக்கமல்ல என விளக்கமளித்திருக்கிறது.