அல்லு அர்ஜூன் எக்ஸ் தளம்
சினிமா

புஷ்பா 2 காண சென்றபோது கூட்டநெரிசலில் பெண் மரணித்த விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜூன் வருத்தம்

புஷ்பா 2 காண சென்றபோது கூட்டநெரிசலில் பெண் மரணித்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜூன் வருத்தம் தெரிவித்தும், நிதியுதவி அறிவித்தும் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

ஜெ.நிவேதா

சுகுமார் இயக்கி நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா இரண்டாம் பாகம் திரையரங்குகளில் டிச.5 வெளியானது. முன்னதாக, இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு வசூல் மட்டுமே ரூ.100 கோடியை கடந்ததாகக் கூறப்படுகிறது.

புஷ்பா 2

இதற்காக டிச.5 அன்று ஐதராபாத்தில் சிக்கடப்பள்ளியில் உள்ள சந்தியா திரையரங்கில் இரவு 9.30 மணிக்கு புஷ்பா-2 பிரீமியர் காட்சியைக் காண குடும்பத்துடன் சென்ற 35 வயதான ரேவதி என்ற பெண் கூட்டத்தில் சிக்கி மயங்கி விழுந்தார். உடனே, அப்பெண்ணை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். இதில் அவரது மகனும் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து விபத்து தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அதிகளவிலான கூட்டத்தை ஏற்பாடு செய்த சந்தியா தியேட்டர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ரேவதியின் மரணம் குறித்து அல்லு அர்ஜுன் இன்று ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், “இச்சம்பவத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தோம். அந்தச் செய்தியால், புஷ்பா-2 கொண்டாட்டங்களில் எங்களால் தீவிரமாகப் பங்கேற்க முடியவில்லை. ரேவதியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

என் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்குவேன். எங்கள் குழுவினரிடம் இருந்து எந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.