வீர் சர்மா எக்ஸ் தளம்
சினிமா

ராஜஸ்தான் | ராமாயண சீரியலில் நடித்த 8 வயது பாலகர்.. தீ விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

ராமாயண சீரியலில் நடித்த 8 வயது பாலகர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

ராமாயண சீரியலில் நடித்த 8 வயது பாலகர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த ’ஸ்ரீமத் ராமாயணம்’ என்ற சீரியலில் புஷ்கல் வேடத்தில் நடித்து வந்தவர் பாலகரான வீர் சர்மா. அவர், எட்டு வயதிலேயே தனது திறமையான நடிப்பால் பலரையும் கவர்ந்தார். இந்த நிலையில், ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள அவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறி வீர் சர்மாவும் அவரது சகோதரரும் இறந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டபோது சகோதரர்கள் வீட்டில் தனியாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பயிற்சி மைய ஆசிரியரான அவர்களது தந்தை ஜிதேந்திர சர்மா ஒரு பஜனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், அதே நேரத்தில் அவர்களின் தாயார் நடிகை ரீட்டா சர்மா அந்த நேரத்தில் மும்பையில் இருந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

வீர் சர்மா

சம்பவ இடத்தை ஆய்வு செய்த கோட்டா காவல் கண்காணிப்பாளர் தேஜேஷ்வானி கௌதம், தீ விபத்துக்கு ஷார்ட் சர்க்யூட் காரணமாக இருக்கலாம் எனவும், வரவேற்பறையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் புகையை சுவாசித்ததால் இறந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர், அவர்களது உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விருப்பத்திற்கு இணங்க, குழந்தைகளின் கண்கள் ஒரு கண் வங்கிக்கு தானமாக வழங்கப்பட்டன. இந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மட்டுமின்றி, ஒட்டுமொத்த ரசிகர்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.