'பராசக்தி' திரைப்படம், எந்த அரசியல் சார்பும் இல்லாமல் மாணவர்கள் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். தணிக்கை சான்றிதழ் கிடைத்த நிலையில், 25 திருத்தங்களுடன் படம் வெளியாகிறது.
சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள படம் `பராசக்தி'. சிவாவின் 25வது படமாக உருவாகியுள்ள இந்தப் படம் ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் இருந்தது.
இப்படத்தை பார்த்த தணிக்கை வாரியம் பல்வேறு காட்சிகளில் கட் செய்யவும், குறிப்பாக இந்திக்கு எதிரான போராட்டம் சார்ந்த காட்சிகளில் ஆட்சேபம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. அவற்றை நீக்கினால் படம் சொல்ல வரும் கருத்தே நீர்த்துப் போய்விடும் என்பதால் மும்பையில் Revising Committeeக்கு சென்றது படக்குழு.
இப்படி நீடித்த இழுபறிக்கு இடையில் நேற்று பராசக்தி படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. இப்படம் 2 மணிநேரம் 42 நிமிடங்கள் நீளம் எனவும், 16 வயதுக்குட்பட்டவர்கள் பெற்றோருடன் இணைந்து படத்திற்கு வரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
விஜயின் `ஜனநாயகன்' படம் தணிக்கை சான்று கிடைக்காததால் வெளிவரமுடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், பொங்கலுக்கு தனிப்படமாக இன்று வெளியாகிறது பராசக்தி திரைப்படம்.
தணிக்கை வாரியம் உத்தரவிட்டபடி 25 திருத்தங்களுடன் பராசக்தி படம் இன்று வெளியாகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படம், அதிக எதிர்ப்பார்ப்புகளுடன் இன்று ரிலீஸ் ஆகிறது.
இந்தநிலையில் படம் குறித்து பேசியிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், பராசக்தி திரைப்படம் மாணவர்கள் போராட்டம் பற்றியது என்றும் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ காட்சிகள் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார். சூர்யா நடிக்க இருந்த புறநானூறு படத்தின் கதைதான் இப்போது பராசக்தி திரைப்படமாக வெளியாக உள்ளதாகவும் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டார்.
அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் படத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றுவருவதாகவும் கூறினார். ஜனநாயகன் திரைப்படம் திரையிடுவது தள்ளிப்போனது எதிர்பாராத ஒன்று என்றும் அந்த படத்துடன் பராசக்தி போட்டி என்பதில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும் தெரிவித்தார். சிக்கல்களை தீர்க்க படத்தை 2 மாதம் முன்பாகவே தணிக்கைக்கு அனுப்புவதை தயாரிப்பாளார்கள் மற்றும் படக்குழுவினர் உறுதிசெய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினார். அமரன் திரைப்படத்துக்கு தேசிய விருதுகிடைக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் சிவகார்த்திகேயன் கூறினார்.