Cashless economy என்பது physical cash-க்கு பதிலாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகம் செய்ய ஊக்குவிப்பதாகும். இதில் கிரெடிட், டெபிட் கார்டுகள், மொபைல் வாலட்டுகள், ஆன்லைன் பரிவர்த்தனைகள் போன்றவை அடங்கும். நிதி செயல்முறைகளை ஒழுங்குபடுத்தவும், கருப்பு பணத்தின் சுழற்சியை ஒழிக்கவும், பணபரிவர்த்தனைகளில் வெளிப்படை தன்மையை கொண்டுவரவும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதாக மத்திய அரசு கூறி வருகின்றனர்.
அப்படி இந்த Cashless economy முறையில் இருக்க கூடிய நன்மைகள் என்னவென்று பார்க்கும்போது, எப்போதும் பணத்தை கையில் வைத்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.
பணமாக வைத்திருக்கும்போது திருடுபோகும் என்ற பயமும் இல்லை.
டிஜிட்டல் முறையில் பணத்தை பரிவர்த்தனை செய்யும்போது அதற்கான ஆதாரங்கள் இருக்கும். எனவே, கருப்பு பணத்தை கண்டறிய இது உதவும்.
முறையற்ற நடவடிக்கைகளில் பணத்தை டிஜிட்டலாக பரிமாற்றம் செய்யும்போது அது கண்காணிப்புக்குள் வரும். ஆகவே முறையற்ற பயன்பாடுகளை தடுக்க முடியும்.
கள்ளநோட்டுகள் பயன்பாட்டை தவிர்க்கலாம்.
அதே நேரத்தில் Cashless economy-ல் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் என்னவென்று பார்க்கும்போது, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அறிமுகம் இல்லாத நபர்களுக்கும், ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களுக்கும் இந்த நடைமுறை ஒத்துவராது.
சைபர் பாதுகாப்பு சரியாக இல்லையெனில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் சவாலாக அமையும்.
இது அனைத்தையும் தாண்டி கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. பணத்தை நாம் கையில் இருந்து கொடுக்கும்போது அது எத்தனை இடங்களுக்கு மாறினாலும் அதன் மதிப்பு மாறாமல் அப்படியே இருக்கும். அதே நேரத்தில் கிரெடிட் கார்டு வாயிலாக பில் தொகையை கட்டும்போது அதற்கான வட்டியை நாம் கொடுக்க வேண்டியதாக இருக்கும். இது நமது செலவினை அதிகரிக்கும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் 40ரூபாய் பணமாக கொடுத்து ஒரு பால் பாக்கெட் வாங்குகிறீர்கள். பால்கடைக்காரர் அந்த 40ரூபாயில் இரண்டு டீ குடிக்கிறார். டீக்கடைக்காரர் அந்த 40ரூபாயை பணமாக கொடுத்து சர்க்கரை வாங்குகிறார். மேலே குறிப்பிட்ட இந்த பரிவர்த்தனைகளில் அனைத்து இடங்களிலும் அதன் மதிப்பு 40 ரூபாயாகத்தான் இருக்கும்.
இதையே cashless transaction அடிப்படையில் கிரெடிட் கார்டு வாயிலாக 40ரூபாயை கொடுக்கும்போது அந்த குறிப்பிட்ட கிரெடிட் கார்டு கொடுத்த வங்கிக்கு சராசரியாக 3% வட்டியை கூடுதலாக கட்ட வேண்டியதாக இருக்கும். ஒவ்வொரு பரிவர்தனைகளிலும் 3% சராசரி வட்டி என வைத்துக்கொண்டால் இறுதியில் நாம் செலவு செய்த தொகை அதிகமாக ஆகும்.
பணத்தை நேரடியாக கொடுத்து ஒரு பொருள் அல்லது சேவையை வாங்குவதை விட கிரெடிட் கார்டில் செலவு செய்யும்போது கூடுதல் சுமையாக அமையும். இது கிரெடிட் கார்டு கொடுத்த அந்த குறிப்பிட்ட வங்கி அல்லது நிறுவனத்திற்கு லாபமாக அமையலாம். ஆனால், தனிப்பட்ட நபருக்கு இது கூடுதல் சுமையாக அமையும்.