கடந்த வாரம் பங்குச் சந்தை சரிவடைந்ததால் ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ரூ.1.54 லட்சம் கோடியை இழந்துள்ளது. இதில் ரிலையன்ஸ் மட்டும் ரூ.46,000 கோடியை இழந்துள்ளது.
செய்தியாளர்; M.மீரா
பங்குச் சந்தை சரிவால், ஏழு முக்கிய நிறுவனங்கள் மொத்தமாக ரூ.1.54 லட்சம் கோடியை இழந்துள்ளன. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளது.
கடந்த வாரம் பங்குச் சந்தை மந்தமடைந்து காணப்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகினர். நாட்டின் மிகப்பெரிய 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு மொத்தமாக ரூ.1.54 லட்சம் கோடிக்கும் அதிகமாக இழப்பை சந்தித்திருக்கிறது.
குறிப்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தது. அதேசமயம், எஸ்பிஐ, எல்&டி மற்றும் எல்ஐசி போன்ற சில நிறுவனங்கள் சந்தையில் சரிவு இருந்தபோதிலும் லாபம் ஈட்டியுள்ளன.
ரிலையன்சின் சந்தை மதிப்பு ரூ.46,078 கோடி சரிந்து ரூ.17.87 லட்சம் கோடியாகக் குறைந்தது. ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மூலதனமும் ரூ.33,333 கோடி சரிந்து ரூ.11.46 லட்சம் கோடியாகக் குறைந்தது.
தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல்லும் இழப்புகளைச் சந்தித்ததால் அதன் சந்தை மதிப்பு ரூ.25,408 கோடி சரிந்து ரூ.11.14 லட்சம் கோடியாகக் குறைந்தது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ்-இன் சந்தை மதிப்பு ரூ.22,920 கோடி சரிந்து ரூ.8.15 லட்சம் கோடியாகக் குறைந்தது.
ஹிந்துஸ்தான் யூனிலீவரின் சந்தை மதிப்பு ரூ.13,169 கோடி சரிந்து ரூ.5.04 லட்சம் கோடியாகக் குறைந்தது.
பஜாஜ் ஃபைனான்ஸின் சந்தை மதிப்பு ரூ.7,253 கோடி சரிந்து ரூ.5.63 லட்சம் கோடியாகவும், ஐசிஐசிஐ வங்கியின் மதிப்பீடு ரூ.6,311 கோடி சரிந்து ரூ.9 லட்சம் கோடியாகவும் குறைந்தது.
இந்த 7 நிறுவனங்கள் சரிவை சந்தித்த அதே சமயம் சில நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டன. உள்கட்டமைப்பு நிறுவனமான எல்&டி-யின் சந்தை மதிப்பு ரூ.20,608 கோடி அதிகரித்து ரூ.5.60 லட்சம் கோடியாக உயர்ந்தது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் மதிப்பு ரூ.13,753 கோடி அதிகரித்து ரூ.8.89 லட்சம் கோடியாக உயர்ந்தது.
எல்ஐசி-யின் சந்தை மூலதனம் ரூ.6,040 கோடி அதிகரித்து ரூ.5.20 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது.