Gold Exange Gold Exange
மார்க்கெட்

தங்க நகை விற்பனையில் புதிய டிரெண்ட்.. வேகம் பிடிக்கும் மறுசுழற்சி வணிகம்!

தங்கம் இறக்குமதிக்கு மத்திய அரசு வரிகளை அதிகரித்துள்ள நிலையில் அதனால் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்க நகைக்கடைகள் பல்வேறு யுக்திகளை கையாளத் தொடங்கியுள்ளன.

PT WEB

மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையை சமாளிக்க தங்க நகைகள் வாங்குவதை ஓராண்டுக்கு தள்ளிப்போட பிரதமர் மோடி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து தங்கம் வாங்குவதை குறைக்கும் நோக்கில் அதன் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15% ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் ஏற்கனெவே உச்சாணிக்கு சென்றுள்ள தங்கம் விலை மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

தங்கம்

இதை சமாளிக்க நாட்டில் உள்ள தங்கத்தையே மறு சுழற்சி முறையில் பயன்படுத்தும் உத்தியை நகைக்கடைகள் தீவிரமாக செயல்படுத்த தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக வீடுகளில் உள்ள தங்க நகைகளை வாங்கிக்கொண்டு புதிய நகைகளை விற்கும் போக்கு கடந்த சில நாட்களாக நாடெங்கும் வேகம் பிடித்துவருகிறது. முன்னணி நகைக்கடைகள் தங்க நகை பரிமாற்ற திட்டங்களை கவர்ச்சிகரமான சலுகைகளுடன் அறிவித்துள்ளன. சில நிறுவனங்கள் தங்கள் கடைகளில் தங்க நகைகளை வாங்கிக்கொண்டு அதற்கு பதில் பணமாக தருவதற்கென பிரத்யேக கவுன்ட்டர்களை திறந்துள்ளன.

22 காரட் நகைகளுக்கு பதிலாக 18 காரட் நகைகளை விற்பதற்கும் பல கடைகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இன்னும் சில நிறுவனங்கள் இன்னும் சில படிகள் முன்னேறி 14 காரட் நகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. தமிழகத்தில் பல கடைகள் தங்க நாணயம் விற்பனையை நிறுத்தியுள்ளதுடன் நகை சேமிப்பு திட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்திவிட்டன. இந்தியாவில் வீடுகளில் பல ஆயிரம் டன் தங்கம் உள்ளதாகவும் அதை மீண்டும் சந்தைகளுக்கு கொண்டு வந்தாலே தங்கம் இறக்குமதியை வெகுவாக குறைக்கலாம் என நகை வணிகர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது.

குறைந்த காரட் நகைகளை விற்பது மூலம் தங்கம் இறக்குமதியை 20 முதல் 30% வரை குறைக்க முடியும் என அகில இந்திய நகை வணிகர்கள் கூட்டமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. தங்கத்தை ஆவண வடிவில் வாங்கும் ETF, டிஜிகோல்டு திட்டங்களை நிறுத்திவைக்கவும் பிரதமருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.