நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆபரண தங்கத்தின் விலை இன்றைய தினமும் இரண்டு முறை விலை உயர்வை சந்தித்திருக்கிறது. கடந்த 19ம் தேதி முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், 22 காரட் தங்கம் சவரனுக்கு 85 ஆயிரத்தை கடந்திருக்கிறது..
சர்வதேச சந்தையின் பவர் ஹவுஸாக கருதப்படும் தங்கம் நாளுக்கு நாள் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்தவகையில், இன்று ஒரே நாளில் இரண்டு முறை தங்கத்தின் விலை உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. காலையில் ரூ.560 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.1120 விலை அதிகரித்திருக்கிறது. அதாவது சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து தங்க பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்தமாக கடந்த இரண்டு நாட்களில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2,800 ரூபாய் அதிகரித்திருக்கிறது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.10,640 ரூபாய்க்கும், ஒரு சவரன் ரூ.85,120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாக பார்க்கும் அதேவேளையில், சமானியர்கள் மட்டுமல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது. சர்வதேச நாடுகளுக்கு இடையே நடந்து வரும் இராணுவ மோதல்கள், வர்த்தக போர், பணவீக்கம், அமெரிக்க டாலரின் மதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயர்வதற்கு ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
வர்த்தக போர் காரணமாக தற்போது தங்கம் அதிகப்படியான விற்பனை நிலையில் உள்ளது. அடுத்த சில மாதங்களில் எதிர்பார்க்காத திடீர் சரிவு இருக்கும் என்றும் பின்னர் புதிய உச்சத்தை அடையலாம் என்று வல்லுநர்களின் கணிப்பாக இருக்கிறது.
சர்வேதேச நாடுகளுக்கு இடையேயான மோதல்கள், வர்த்தக போர், அமெரிக்கா டாலரின் மதிப்பு போன்ற புவிசார் அரசியல் பதற்றங்கள் கட்டுக்குள் வரவில்லையென்றால் 2026-ஆம் ஆண்டிலும் தங்க விலையின் ஏற்றம் தொடரும் என பெரும்பாலான தொழில் வல்லுநர்கள் கருதுகின்றனர்