நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் pt desk
விவசாயம்
தஞ்சை: தொடர் கனமழை – அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை
தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 200 ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி முளைக்க துவங்கின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
செய்தியாளர்: ந.காதர்உசேன்
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரத்தநாடு தாலுகாவிற்கு உட்பட்ட வடக்கு கோட்டை, மண்டல கோட்டை ஆயங்குடி, சோழபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பின்பட்ட குறுவை பணிகள் தொடங்கி தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன.
நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் pt desk
இந்நிலையில், தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மிதக்கின்றன. மிகுந்த சிரமத்திற்கு இடையில் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து நட்ட பயிர்கள் அறுவடை நேரத்தில் முளைக்க தொடங்கியதால் மிகப்பெரிய அளவிற்கு மகசூல் இழப்பையும், வருவாய் இழப்பையும் சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.