விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு சார்பில் உழவன் செயலியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தியுள்ளார். அதன் சிறப்பம்சங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வகுக்கப்பட்டுள்ள ‘உழவன் செயலி’ மூலம் விவசாயிகள் வேளாண்மை தொடர்பான அனைத்துத் திட்டங்களையும் தெரிந்து கொள்ளலாம். டிராக்டர், பவர் டிரில்லர் போன்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் நிழல் வலைக்குடில், பசுமைக்குடில் போன்ற உயர்மதிப்புள்ள உட்கட்டமைப்புகளை மானியத்தில் பெற உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளும் தங்களின் பயிர் காப்பீடு தொடர்பான விவரங்களை இந்த செயலியின் மூலம் அறிந்து கொள்ளலாம். தங்கள் வட்டாரத்தில் உள்ள அரசு, தனியார் கடைகளில் உரம், விதை இருப்பு விவரங்கள், வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ள அரசு மற்றும் தனியார் மையங்களை தொடர்பு கொள்ளும் வசதி ஆகியவை உழவன் செயலியில் உள்ளன.
விளைப் பொருட்களின் சந்தை விலை விவரங்கள், விவசாயிகள் தங்கள் பகுதியின் அடுத்த நான்கு நாட்களுக்கான வானிலை நிலவரங்களை அறியும் வசதி மற்றும் வேளாண் விரிவாக்க பணியாளர்கள் வருகை விவரம் உள்ளிட்ட ஒன்பது வகையான சேவைகளை உழவன் செயலி மூலம் பெற்று பயன்பெறலாம். உழவன் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாக விவசாயிகள் தங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.