சோமாலியா தாக்குதலில் 276 பேர் பலி: உலகத் தலைவர்கள் கண்டனம்
சோமாலியாவில் நடந்த பயங்கரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு உலக நாட்டுத் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
சோமாலியாவின் தலைநகர் மோகதீஷுவில் உள்ள ஹோடான் ஜங்ஷனில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நேற்று முன்தினம் இரவு, சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் ஓட்டல் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. குண்டு வெடிப்பினால், அங்கிருந்த கடைகளிலும் தீப்பற்றியது. மக்கள் அலறியடித்து ஓடினர். அப்போது சிறிது நேரத்தில் மற்றொரு குண்டு வெடித்தது. இந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று தெரிகிறது. இது தற்கொலைப் படை தாக்குதல் என்றும் அல்கொய்தா ஆதரவு பெற்ற சஹாப் என்ற பயங்கரவாத அமைப்பு இதை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாட்டுத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.