ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு அந்நாடு நடத்திய அணு ஆயுத சோதனை காரணமாக இருக்கலாம் என உலக நாடுகள் சந்தேகம் தெரிவித்துள்ளன.
பாக்தாத் நகரில் அமெரிக்கப் படைகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ உளவு படைப்பிரிவின் தலைவர் ஜெனரல் குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஈரானில் ஒரு ஹீரோவைப் போல போற்றப்பட்ட சுலைமானி கொல்லப்பட்டது அந்நாட்டு அரசினை கோபத்தில் ஆழ்த்தியது. இதனால், அமெரிக்கா - ஈரான் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. சுலைமானி கொலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏவுகணைகள் மூலம் அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் 80 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததாக ஈரான் தெரிவித்தது. ஆனால் அமெரிக்கா மறுத்துள்ளது.
இதனிடையே ஈரானில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அணு மின் நிலையம் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஈரானின் வளைகுடா கடற்கரை பகுதிக்கு அருகிலுள்ள பஷர் நகரில் அணு மின் உற்பத்தி மையம் உள்ளது. இந்த மையத்திலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில்தான் நேற்று காலை 6.49 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.5 பதிவானதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அணு உலை அருகே நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது உலக நாடுகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் அணு ஆயுத சோதனை ஏதும் நடத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.