உலகம்
வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ.7 கோடி வரவு: 19 லட்சத்தை செலவு செய்த பெண்
வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ.7 கோடி வரவு: 19 லட்சத்தை செலவு செய்த பெண்
பெண்ணின் வங்கிக் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட ரூ. 7.7 கோடியில் ரூ.19 லட்சம் செலவழிக்கப்பட்டுவிட்ட நிலையில் செலவான பணத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் வங்கிக் கணக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7,74,839 பவுண்டுகள் (ரூ. 7.7 கோடி) தவறுதலாக வரவு வைக்கப்பட்டது. வருவாய் மற்றும் சுங்கத்துறைக்கு செல்ல வேண்டிய பணம் தவறுதலாக அப்பெண்ணின் கணக்குக்கு சென்றது. இதனை 15 மாதங்களாக கவனிக்காத அதிகாரிகள் பின்னரே தங்களது கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை என தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக வங்கியை அதிகாரிகள் தொடர்புகொண்டு விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தான் பணம் வேறொருவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
உடனடியாக அந்த பெண்ணை தொடர்பு கொண்ட வங்கி அதிகாரிகள், பணத்தை திருப்பித்தரக் கோரியதற்கு அவர் சம்மதித்தார். ஆனால் வரவான தொகையில் 20,000 பவுண்டுகளை (ரூ.19 லட்சம்) செலவழித்து விட்டதாக அந்தப் பெண் கூறினார். அதை உடனடியாக திருப்பிச் செலுத்தும் நிலையில் தான் இல்லை எனவும் கூறினார்.
இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், இவ்வளவு பணம் தவறுதலாக டெபாசிட் ஆகியிருக்க வேண்டும் என்பதை அப்போதே அறிந்திருந்ததாகவும், சம்பந்தப்பட்டவர்கள் தன்னை தொடர்பு கொள்வார்கள் என காத்திருந்ததாகவும் கூறினார். மேலும் இந்த பணம் டெபாசிட் ஆனப் பின் வருமான வரி தாக்கல் செய்தபோது கூட இவ்வளவு பெரிய தொகை வரவானது குறித்து அதிகாரிகள் யாரும் எந்த கேள்வியும் கேட்கவில்லை என்றார். இதையடுத்து செலவான 20,000 பவுண்டுகளை மீட்கும் ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்.