40 வயதான ஜோசலின் ஜேம்ஸ் என்ற பெண் சில வருடங்களுக்கு முன்பு போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இந்த பழக்கத்தினால் தனது கார் மற்றும் வேலையைக்கூட இழந்தார். பழக்கம் மிகவும் தீவிரமாகவே 2007-2012க்குள் 16 முறை கைதுசெய்யப்பட்டார். மேலும் ’மோஸ்ட் வான்டேட்’ லிஸ்ட்டில் இவர் பெயர் சேர்க்கப்பட்டது.
ஒருநாள் இரவு, தொலைக்காட்சியில் ‘வான்டேட்’ கிரிமினல் என இவரது பெயர் ஒளிபரப்பானது. இதனால் வாழ்க்கையை வெறுத்த ஜோசலின் தானாக முன்வந்து போலீஸில் சரணடைந்தார். ஆறு மாத சிறை தண்டனைக்குப் பிறகு வெளியே வந்து, மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்குச் சென்று 9 மாதங்கள் அங்கு தங்கி, குணமாகி வீடு திரும்பினார். இப்போது போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ள பெண்களுக்கு அதிலிருந்து வெளிவர சிகிச்சை அளித்துவருகிறார்.
இந்நிலையில், காவல் அதிகாரி டெர்ரெல் பாட்டர் என்பவர், எட்டு மாதங்களுக்கு மேலாக கிட்னி கிடைக்காமல் காத்திருப்பதாக அவரது மகள் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். அதைப் பார்த்த ஜோசலின் தனது ஒரு கிட்னியை அந்த காவல் அதிகாரிக்கு தானமாக கொடுக்க முன்வந்துள்ளார். தற்போது இருவரும் நன்றாக உள்ளனர்.
இதுபற்றி வியுஎம்சி வாய்ஸ்க்கு அவர் பேட்டி கொடுத்ததில், ’’அந்த ஃபேஸ்புக் போஸ்டரை பார்த்ததும், அவர் என்னை பலமுறை கைது செய்தவர் என்பதை நினைவுகூர்ந்தேன். அந்த அதிகாரியின் கிட்னி என்னிடம் இருப்பதாக இறையருள் வாக்கு எனக்குள் ஒலித்ததை உணர்ந்தேன். ஆனால் நான் ஒரு வாரத்திற்கு 78 மணிநேரம் வேலை செய்பவள். என்னால் முடியாது எனக் கூறினேன். ஆனால் இறுதியில் அவருக்கு என்னுடைய ஒரு கிட்னியைக் கொடுக்க முன்வந்தேன்’’ என்று கூறியுள்ளார்.
மேலும் காவல் அதிகாரி டெர்ரெல் கூறுகையில், ‘’ எனக்கு கிட்னி உதவுபவர்கள் லிஸ்டில் இருக்கும் 100 பேர் யார் எனக் கேட்டால் அதில் கண்டிப்பாக ஜோசலின் இருக்கமாட்டார். காரணம், நான் அவரை பலமுறை கைது செய்துள்ளேன். ஆனால் அவரை என் வாழ்க்கையில் மீண்டும் அனுப்பியதற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்’’ என்கிறார் அவர்.