மலேசியாவின் ஜோகூரில் வசித்து வரும் ஒரு வயதான தம்பதினர், சந்தையில் பஃபர் என்ற மீனை கடந்த 25-ம் தேதி வாங்கி சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதில் நச்சுத்தன்மை இருந்ததால், அந்த தம்பதிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அன்றைய தினமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கணவர் தீவிர சிகிச்சை பிரிவில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது 83 வயதான மனைவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சோகமான சம்பவம் குறித்து அவர்களின் மகள் Ng Ai Lee மலேசிய ஊடகங்களில் கூறுகையில், “என் பெற்றோர் பஃபர் மீனை உள்ளூர் கடையில் இருந்து வாங்கி சமைத்து சாப்பிட்டுள்ளனர். என் பெற்றோர் பல ஆண்டுகளாக அந்த மீன் சந்தையில்தான் மீன் வாங்கி சமைத்து சாப்பிடுவர். அப்படித்தான் அன்றைய தினமும் அதையே செய்துள்ளனர். அதில் நச்சுத்தன்மை இருக்குமென அவர்களுக்கு தெரியவில்லை. இறுதியில் அவர்களுக்கு இப்படியாகிவிட்டது” என்றுள்ளார் வேதனையுடன்.
மேலும் அவர் கூறுகையில், ''மதிய உணவிற்காக அந்த மீனைச் சுத்தம் செய்து சமைத்து சாப்பிட்டுள்ளனர் என் பெற்றோர். பின் சிறிது நேரத்திலேயே, எனது தாயார் நடுங்க ஆரம்பித்து மூச்சு விடுவதில் சிரமத்தை அனுபவிக்க ஆரம்பித்தார். பின்னர், எனது தந்தைக்கும் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இதே போன்ற அறிகுறிகள் தென்பட தொடங்கியது. உடனே இருவரையும் மருத்துவமனைக்கு நாங்கள் அழைத்துச் சென்றோம்'' என்றிருக்கிறார்.
அங்கு அன்று மாலையே அவரது தாயார் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். தந்தையும் கோமா நிலையில் இருக்கிறார். இதைத்தொடர்ந்து, இச்சம்பவம் நடந்த அன்று ஜோஹோர் மீன் சந்தையில் விற்கப்பட்ட அனைத்து மீன்களும் மாவட்ட சுகாதார அலுவலகத்தால் ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
உணவு விஷயத்தில் ஒவ்வொருவரும் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும் என்பதையே இச்சம்பவம் உணர்த்துவதாக உலகம் முழுக்க உள்ள இணையவாசிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.