'லைட்டா டிரிங்ஸ் அடிச்சா ஒன்னும் செய்யாது' என்று நினைப்பவரா நீங்கள்?... எச்சரிக்கிறது WHO
மது அருந்துவதால் 7 வகையான புற்றுநோய்கள் வருவதற்கு மிக அதிக வாய்ப்புகள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
மது குடிப்பதால் பெரிதாக உடல்நல பாதிப்பு ஏதுமில்லை என்கிற தவறான புரிதல் பலரிடம் நிலவுகிறது. இன்னும் சிலரோ, 'எப்பவாச்சும் தானே அல்லது 'லைட்டா' தானே.. என்ன செஞ்சிரப் போகுது' என்கிற மனநிலையில் மது அருந்துகின்றனர். இந்நிலையில்தான், உலக சுகாதார நிறுவனம் தற்போது அதிரவைக்கும் ஓர் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. சிறிய அளவில் குடித்தாலும் சரி, விலை உயர்ந்த மதுவை குடித்தாலும் சரி, மது குடிப்பதால் 7 வகையான புற்றுநோய் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது உலக சுகாதார அமைப்பு.
உலக சுகாதார அமைப்பு The Lancet Public Health என்ற இதழில் வெளியிட்ட கட்டுரையில், ‘ஆரோக்கியத்தை பாதிக்காத வகையில் மது குடிக்கலாம் என்றும், குறைவான அளவு மது குடித்தால் ஒன்றும் செய்யாது என்று கூறும் கருத்தும் ஏற்கக் கூடியது அல்ல. மது குடிப்பதால் நன்மை ஏற்படும் என்று எந்த உத்தரவாதத்தையும் அளிக்க முடியாது. மேலும் மது குடிப்பதால் வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்ற 7 வகை புற்றுநோய் ஏற்படும். மது பானம் என்பது சாதாரண பானம் வகையை சேர்ந்தது அல்ல; உடலுக்கு நிறைய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.
ஒயின், பீர், ரம் உட்பட அனைத்து மதுபானங்களும் புற்றுநோய் ஏற்படுத்துகின்றன. விலை உயர்ந்த மதுவாக இருந்தாலும் அவற்றை சிறிய அளவில் குடித்தாலும் கூட புற்றுநோயின் அபாயத்தை ஏற்படுத்தும். மதுபானம் குடிக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர அதிக வாய்ப்புள்ளது. நீங்கள் எவ்வளவு மது குடிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல; கொஞ்சம் குடித்தால் கூட பாதிப்புதான். அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. உலகளவில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகளவில் மது குடிக்கிறார்கள். இப்பகுதியில் 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புற்றுநோய் பாதிப்பு அபாயத்தில் உள்ளனர். மது குடிப்பதால் அதிகளவில் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர்’ என்று கூறப்பட்டுள்ளது.