கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, தலைநகர் ஏதென்ஸின் புறநகர் பகுதிகளை நெருங்கி வரும் நிலையில் அங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் அவரசமாக வெளியேறி வருகின்றனர்.
கிரீஸ் நாட்டில் பல்வேறு பகுதிகளில் 5ஆவது நாளாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. தீயை அணைக்க தீயணைப்பு படையினர் போராடினாலும் பலத்த காற்றும் கடுமையான வெயிலும் பெரும் தடையாக இருக்கின்றன. இதனால் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. 700 தீயணைப்பு படையினருடன் ராணுவத்தினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சிறிய ரக விமானங்கள் மூலம் வானிலிருந்து தண்ணீரை பொழிந்து தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர்.
இவர்களுக்கு உதவ சைப்ரஸ், பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்தும் வீரர்கள் வந்துள்ளனர். கிரீஸ் நாட்டில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்ப அலை பாதித்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் உள்ள தாவரங்கள் அழிந்துள்ளன. ஏராளமான விலங்களினங்களும் தீயில் கருகி இறந்துள்ளன.