ஆதார் விவரங்களை அமெரிக்க உளவு அமைப்பு திருட வாய்ப்பு: விக்கிலீக்ஸ் பகீர்
இந்திய மக்களின் அடையாள அட்டையான ஆதாரின் விவரங்களை திருடுவதற்கான தொழில்நுட்பம் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-விடம் உள்ளது என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விக்கிலீக்ஸ், இந்திய ஆதார் அட்டைகளை தயாரிக்க கைவிரல் ரேகை மற்றும் கண் விழித்திரையை ஸ்கேன் செய்வதற்கான தொழில்நுட்பம் அமெரிக்க நிறுவனமான க்ராஸ் மேட்ச்-யிடம் இருந்து பெறப்பட்டது. இந்த நிறுவனத்தின் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இந்தியர்களின் ஆதார் விவரங்களை திருட வாய்ப்பிருக்கிறது" என கூறியுள்ளது.
ஆதார் விவரங்களை இணைக்கும் மென்பொருளை அப்கிரேட் செய்வது போன்று சிஐஏ உளவாளிகள் வந்து, க்ராஸ் மேட்ச் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி திருடி விடுவார்கள் என விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.
இந்தியாவின் ஸ்மார்ட் ஐடெண்டிட்டி டிவைஸ் நிறுவனம் அமெரிக்காவின் க்ராஸ் மேட்ச் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சுமார் 1.2 மில்லியன் இந்திய மக்களின் விரல் ரேகை மற்றும் விழித்திரை தகவல்களை ஆதார் அட்டைக்காக சேகரித்துள்ளது. அதன் மூலம் ஆதார் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே விக்கிலீக்ஸ்-ன் ட்விட்டர் பக்கத்திலும், அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ உளவாளிகள் இந்தியர்களின் ஆதார் விவரங்களை திருடி விட்டார்களா? என்று பதிவிட்டிருந்தது.
விக்கிலீக்ஸ்-ன் இந்த தகவலை இந்தியா மறுத்துள்ளது. மக்களின் ஆதார் விவரங்கள் பத்திரமாக, யாரும் திருடமுடியாதபடி ரகசியக் குறியீடுகளாக மாற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்று இந்தியா விளக்கம் அளித்துள்ளது.