இலங்கையில் பரவலாக கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், பாலத்தை கடக்க முயன்ற சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இலங்கையில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் 100 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக கொழும்புவில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பிரதான சாலைகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக, மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன.
மேலும், இலங்கையில் உள்ள எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, நீர்நிலைகளிலும் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள இலங்கைவாசிகளுக்கு, தொடர்ந்து பெய்து வரும் மழை பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கு எதிராக இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலகவேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.