நெதர்லாந்து செய்த காரியம்! இமாலய உச்சியில் தங்கம் விலை? காத்திருக்கும் பெரிய பூகம்பம்?
செய்தியாளர் - கார்த்திகேயன்
காகித பணம் தான் மனிதன் உருவாக்கியது. ஆனால், தங்கத்தை கடவுளின் பணம் என்று தான் சொல்வார்கள். அவ்வளவு மதிப்பு மிக்க தங்கம், உலக பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் மிகமுக்கிய பங்கு வகித்து வருகிறது. தங்கத்தில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட, உலக நாடுகளின் அரசுகள் தொடங்கி, சாமானிய மக்கள் வரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. நிலைமை இப்படியாக இருக்க, ஒரு நாடு மேற்கொண்ட நடவடிக்கையால், தங்கத்தின் விலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளில் சேமித்து வைத்திருந்த தங்கத்தில் பாதியை, தங்களது நாட்டிற்கே நெதர்லாந்து நாட்டின் மத்திய வங்கி திரும்பப் பெற்றுள்ளது. உலகெங்கிலும் நிலவும் பொருளாதார, அரசியல் நிச்சயமற்ற தன்மையால், எந்த நேரத்திலும் நெருக்கடி ஏற்பட்டால் தங்கம் உடனடியாகக் கையில் இருக்க வேண்டும் என்ற காரணத்தால், இந்த நடவடிக்கையை நெதர்லாந்து மேற்கொண்டுள்ளது.
மேலும், தங்கத்தை உடனுக்குடன் விற்கவோ வாங்கவோ லண்டன் மிகச்சிறந்த இடமாக இருப்பதால், இங்கிலாந்து வங்கியின் பாதுகாப்பகத்தில் அது வைக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து மட்டுமல்லாமல், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளும் தங்கள் வெளிநாட்டுத் தங்கத்தைத் சொந்த நாடுகளுக்கோ அல்லது பாதுகாப்பான இடங்களுக்கோ மாற்றி வருகின்றன.
உலக நாடுகள் குறிப்பாக மத்திய வங்கிகள், பாதுகாப்பிற்காகத் தங்கத்தை அதிகளவில் வாங்கித் குவித்து வருவதுதான் கடந்த சில ஆண்டுகளாகத் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். உலகளவில் போர், பொருளாதாரத் தடையோ அல்லது பணவீக்கமோ ஏற்படும்போது, காகிதப் பணத்தின் மதிப்பு குறையலாம் என்ற அச்சத்தில் முதலீட்டாளர்களும் நாடுகளும் தங்கத்தின் மீது முதலீடு செய்யத் தொடங்குவார்கள்.
இதனால் தங்கத்திற்கு மவுசு கூடி விலை உயரும். நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பெரிய நாடுகள் தங்கள் தங்கத்தைத் தாங்களே பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் போக்கு, உலகப் பொருளாதாரத்தில் ஏதோ நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது என்ற சமிக்ஞையை முதலீட்டாளர்களுக்குத் தருகிறது. இதுவும் தங்கம் விலை உயர மறைமுகமாக வழிவகுக்கிறது.
இந்தியா உலக சந்தையில் இருந்து அதிகளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடு என்பதால், உலகளாவிய விலையேற்றத்தின் தாக்கம் உடனடியாக இந்தியச் சந்தையிலும் எதிரொலிக்கும். உலகளாவிய புவிசார் அரசியல் குழப்பங்களால் கரன்சி மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் இறக்குமதி வரிகள் இந்திய சந்தையில் தங்கத்தின் விலையைத் தீர்மானிக்கும். எனவே, நெதர்லாந்தின் இந்த நடவடிக்கை இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

