'அதிதீவிர நடவடிக்கை எடுத்தாக வேண்டும்' - கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுதை தடுத்து நிறுத்த அதிதீவிர நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டிய நிலை வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
சீனாவில் கொரோனா தாக்குதலால் இறந்தவர்கள் எண்ணிக்கை 2,641 ஆகவும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 78,497 ஆகவும் உயர்ந்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதாக அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். அதேசமயம் ஹுபய், வுகான் தவிர மற்ற பகுதிகளில் பரவும் அபாயம் உள்ளதை மறுப்பதற்கில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4% குறைந்துள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்து அதன் எதிரொலியாக அதன் எரிபொருள் தேவை குறையும் என்ற எதிர்பார்ப்பால் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுதை தடுத்து நிறுத்த அதிதீவிர நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டிய நிலை வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனாம் கெப்ரிசிஸ், இவ் வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகள் அதிதீவிர நடவடிக்கைகள் எடுப்பது மூலமே கொரோனா வைரஸ் பரவுவதையும் உயிரிழப்புகளையும் தடுத்து நிறுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.