ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுமா? கண்ணிவெடிகளை அகற்ற முடியாமல் தவிக்கும் ஈரான்!
ஈரான்–இஸ்ரேல்–அமெரிக்கா இடையேயான மோதலுக்கு பின் இரண்டு வார இடைநிறுத்தம் அமலில் இருக்க, நிரந்தர போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடர்பான கூட்டம் இன்று இஸ்லாமாபாத்தில் நடைபெறுகிறது. இதே நேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் தாறுமாறாக பதித்த கடல் கண்ணிவெடிகளை கண்டறிந்து அகற்ற முடியாமல் தவிப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது, கடல் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து புதிய அச்சத்தை எழுப்பியுள்ளது.
அங்குள்ள கடல் கண்ணிவெடிகளைக் கண்டறிய முடியாமல் போனதும், அதைவிட முக்கியமாக, அவற்றை அகற்ற முடியாமல் போனதாலும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க முடியாமல் போனதற்கான காரணம் என்றும் நியூயார்க் டைம்ஸ் செய்திகூறுகிறது. ஈரான் ஒவ்வொரு கண்ணிவெடியையும் எங்கு பதித்தது என்பதைப் பதிவு செய்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அந்த இடங்கள் பதிவு செய்யப்பட்டபோதும், சில கண்ணிவெடிகள் காற்றில் அடித்துச் செல்லப்படும் அல்லது நகரும் வகையில் பதிக்கப்பட்டிருந்தன என்றும் கூறப்படுகிறது. கண்ணிவெடிகளைப் பதிப்பதைவிட அவற்றை அகற்றுவது மிகவும் கடினம் ஆகும் எனவும் கூறப்படுகிறது.
அமெரிக்க இராணுவத்திடம் வலுவான கண்ணிவெடி அகற்றும் திறன்கள் இல்லை; அது கண்ணிவெடி அகற்றும் கருவிகள் பொருத்தப்பட்ட கடலோரப் போர்க் கப்பல்களையே நம்பியுள்ளது. ஈரானிடமும், அது புதைத்த கண்ணிவெடிகளைக்கூட விரைவாக அகற்றும் திறன் இல்லை” என்று அந்த செய்தி அறிக்கை கூறுகிறது.

