நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் என்றால் என்ன? வைரஸ் தாக்கியதன் அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
கொரோனா வைரஸ் சுவாசப் பாதையை தாக்குவதால் எளிதில் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுகிறது. கொரனா வைரஸ் தாக்கிய நபருக்கு காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, வறட்டு இருமல் ஆகியவை ஏற்படும். இதனை தொடர்ந்து மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதன் அடுத்தகட்டமாக கடுமையான உடல் வலி ஏற்பட்டு நிமோனியா வந்து கிட்னி செயலிழக்கிறது. இறுதியில் மரணம் ஏற்படுகிறது.
கொரோனா வைரஸ் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவுவதால், வைரஸ் தாக்கிய நபரை தொடாமல் இருப்பதன் மூலம் வைரஸ் நமக்கு பரவாமல் பார்த்து கொள்ளலாம். சுவாசப் பாதையை தாக்குவதால் வைரஸ் பாதித்த நபரின் இருமல் மற்றும் தும்மல் மூலம் இது பரவுகிறது. வைரஸ் பாதித்த நபர் பயன்படுத்திய பொருட்களை தொடுவதன் மூலமும் பரவுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள, வைரஸ் தாக்கிய நபரிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும், குறைந்தது 20 விநாடிகளுக்கு கைகளை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும், கைகளை நன்றாக கழுவாமல் கண்கள், மூக்கு, வாய் அருகே கொண்டு செல்ல கூடாது. இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கபடாமல் இருப்பதால் வரும் முன் காப்பதே சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள்.