இந்தியர்களை காப்பாற்ற குவைத் செல்கிறார் அமைச்சர் வி.கே. சிங்
கராபி நேஷனல் நிறுவனத்தில் இந்தியத் தொழிலாளர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக அடுத்த வாரம் இந்திய வெளியுறவு இணை அமைச்சர் வி.கே. சிங் குவைத் செல்ல இருக்கிறார்.
குவைத்தின் கராஃபி நேஷனல் நிறுவனத்தில் ஊதியம் வழங்கப்படாத இந்தியத் தொழிலாளர்கள் தொடர்ந்து 13ஆவது நாளாக அலுவலகத்திலேயே தங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 1,200 தமிழர்கள் உள்பட மொத்தம் 7 ஆயிரம் பேருக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. விசா காலம் முடிவடைந்து விட்டதால், பொது இடங்களுக்கு வர முடியாமல் பலர் முடங்கியிருக்கிறார்கள். கராபி நேஷனல் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோரின் பட்டியல் இந்தியத் தூதரகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அடுத்துவாரம் குவைத்து செல்லும் வி.கே. சிங், அந்நாட்டு அரசிடம் இந்த விவகாரம் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் குவைத்துக்கான இந்தியத் தூதர் ஜீவ் சாகரும் குவைத் அதிகாரிகளிடம் அவர் பேச்சு நடத்த இருக்கிறார். முன்னதாக கராபி நேஷனல் தொழிலாளர்கள் விவகாரத்தை இந்தியத் தூதரகம் பலமுறை எழுப்பியிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் வெளியுறவு இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் குவைத்துக்குச் சென்றபோதும் இது தொடர்பாகப் பேச்சு நடத்தினார்.