உலக நாடுகளுக்கு நிதியுதவியை நிறுத்தியது ட்ரம்ப் நிர்வாகம்! அடுத்த அதிரடி முடிவு
அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறார். அந்தவகையில் தற்போது, உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்க உதவித் திட்டங்களுக்கான நிதியுதவியை நிறுத்துமாறு அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். வல்லரசு நாடான அமெரிக்கா, உலகின் மிகப்பெரிய நன்கொடையாளராக விளங்கி வருகிறது. அந்த வகையில், பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கிய பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வருகிறது. இதற்காக அமெரிக்கா தனது நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்ட அளவு நிதியை ஒதுக்கி வருகிறது. கடந்த 2023-இல் 64 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியுள்ளது. இது, அந்த நாட்டின் நிதிநிலை அறிக்கையில் 1 சதவிகிதமாகும்.
இந்த நிலையில், சுகாதாரம், கல்வி, மேம்பாடு, வேலைவாய்ப்பு பயிற்சி, ஊழல் எதிர்ப்பு, பாதுகாப்பு உதவி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா வழங்கி வந்த கோடிக்கணக்கான நிதி உதவியை உடனடியாக நிறுத்துமாறு அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவை அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
எனினும், இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கான அவசர உணவுத் திட்டங்கள் மற்றும் ராணுவ உதவிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், போரினால் சூடான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பஞ்சத்தில் இருக்கும் பல லட்சம் மக்களுக்கு உணவு வழங்குவதற்கான திட்டத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உலகளவில் பாராட்டப்பட்ட எச்ஐவி எதிர்ப்புத் திட்ட நிவாரணத்திற்கான அதிபரின் அவசரகால நிதியுதவி திட்டமும் நிறுத்தப்பட இருக்கிறது. மருத்துவமனைகள் மற்றும் நோய்த்தடுப்பு திட்டங்கள் போன்ற உயிர்காக்கும் சுகாதாரத் திட்டங்களுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. இதில் உக்ரைனுக்கு அளித்து வந்த ஆதரவும் நிறுத்தப்படுகிறது.
2003ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அதிலிருந்து, இந்த திட்டத்தின் மூலம் 55 லட்சம் குழந்தைகளின் உயிர்கள் உள்பட 2.5 கோடி உயிர்கள் காப்பாற்ய பெருமைக்குரிய திட்டமாக இது கருதப்படுகிறது.