
அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரைக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சி, மின்னபோலிஸ் நகரில் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய ஜோ பைடன், “சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்ய வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே உடனடி தற்காலிக போர் நிறுத்தம் தேவை.
இந்த போர் நிறுத்தம் மூலம் சிறைக் கைதிகளை விடுவிக்க நேரம் கிடைக்கும்” என்றார். கடந்த மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ராக்கெட் தாக்குதலில் சுமார் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்
அப்போது முதல் ஹமாஸ் பிரிவினரை குறிவைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. காஸா நகரில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது.