மறைந்த சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடனை பிடிக்க துப்புக்கொடுப்போருக்கு 1 மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனாக இருந்தவர் ஒசாமா பின்லேடன். 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி இவர் திட்டப்படி அமெரிக்காவின் அடுக்குமாடி கட்டடத்தில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் உலகையே அதிர வைத்தது. இந்தச் சம்பவம் அமெரிக்காவை கடும் கொந்தளிப்புக்கு ஆளாக்கியது. இதனால் அல்கொய்தாவை அழிக்க வேண்டும், பின்லேடனை கொல்ல வேண்டும் என்பதே அமெரிக்காவின் லட்சியமாக ஆனது. சுமார் 10 ஆண்டுகள் தேடுதலுக்குப் பின்னர் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஓசாமா பின்லேடனை அமெரிக்க அதிரடியாக கொன்றது.
இதையடுத்து ஒசாமாவின் 3 மனைவிகள் மற்றும் அவரது மகன்கள் சவுதி அரேபியா திரும்ப அமெரிக்க அனுமதி அளித்தது. ஆனால், ஹம்சா பின்லேடன் என்ற மகன் அல்கொய்தாவில் முக்கிய தலைவராக மாறினார். சுமார் 30 வயது மதிக்கத்தக்க இவர், தற்போது சர்வதேச பயங்கரவாத அமைப்புகளை இணைத்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். இதனால் இவரை அமெரிக்கா தேடி வருகிறது. எனவே, இவர் தொடர்பாக தகவல் கொடுப்போருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இவர் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அல்லது சிரியா எல்லையில் பதுங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் ஈரானிலும் இவர் இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.