அமெரிக்கா இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்? ஈரான் எரிசக்தி மையங்களுக்கு குறி.. அதிகரிக்கும் போர் பதற்றம்!!
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது கூட்டுத்தாக்குதல் நடத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாகவும் அதற்கான இறுதி திட்டங்கள் தயாராகி வருவதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதல் இந்த வார இறுதிக்குள் நடைபெறலாம் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும், இத்தாக்குதலுக்கான இலக்குகளில் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், இயற்கை எரிவாயு சேமிப்பு மையங்கள் மற்றும் எரிசக்தி விநியோக வலையமைப்புகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த உள்கட்டமைப்புகளை முடக்குவதன் மூலம், ஈரானின் பொருளாதாரத்தையும் ராணுவ நடவடிக்கைகளையும் பலவீனப்படுத்துவதே அமெரிக்காவின் முக்கிய நோக்கம் என கூறப்படுகிறது.
அதேபோல, ஈரானிய எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தியதிலேயே மிகவும் கடுமையான தாக்குதலில் ஒன்றாக இது இருக்கும் என அமெரிக்காவின் சி.பி.எஸ். நியூஸ் (CBS) தெரிவித்திருக்கிறது.
கடந்த ஜூலை 8-ம் தேதி இருநாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையில், மத்திய கிழக்கில் மீண்டும் தாக்குதல்கள் தீவிரமடைந்திருக்கின்றன. குறிப்பாக, ஈரானின் அணு மற்றும் ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்திய நிலையில், அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்தும் ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும் எண்ணெய் கப்பல்களை குறிவைத்தும் ஈரான் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
இந்தச்சூழலில் தான், அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு குறிவைத்து தாக்குதல் நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த நடவடிக்கைக்கு இன்னும் இறுதி ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தங்களின் எரிசக்தி கட்டமைப்புகளை தாக்கினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் மற்றும் அமெரிக்க கூட்டாளிகளின் எண்ணெய் நிலையங்கள் மீது கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
ஏற்கனவே, மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்த புதிய தாக்குதல் நடைபெற்றால் வளைகுடாவில் முழுமையான போர் சூழல் உருவாகும் என அஞ்சப்படுகிறது.

