உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து ஒரு வார காலத்தில் மட்டும் 10 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது.
உக்ரைனில் கடந்த 24ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. அன்று முதல் தற்போது வரை 10 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர் என ஐநா அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. உக்ரைன் மக்கள் தொகையில் 2 விழுக்காடு மக்கள் 7 நாட்களில் எல்லையை கடந்துள்ளனர். போர் நீடித்தால் இந்த எண்ணிக்கை 40 லட்சமாக அதிகரிக்கும் என்றும், மிகப்பெரிய விவகாரமாக இது உருவெடுக்கும் என்றும் ஐநா கூறியுள்ளது.
சண்டை தொடங்கிய பிப்ரவரி 24ஆம் தேதி 82,000 பேரும், அடுத்தடுத்த நாட்களில் இந்த எண்ணிக்கை நாளொன்றுக்கு 2 லட்சம் என்ற எண்ணிக்கையை தொட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தத்தை அமல்படுத்தி மக்களுக்கு மனிதாபிமான ரீதியிலான உதவிகளை வழங்க வேண்டும் என ஐநா கேட்டுக் கொண்டுள்ளது.